ஒரு பாடசாலையின் அதிபர், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாகத் தனக்கு ஏற்பட்ட சங்கடமான நிலையைத் தெரிவித்தார்.
மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகளுக்கென பரிசில்கள் வாங்கியாகிவிட்டது. பார்வையாளர்களை உபசரிக்கத் தாராளமாக உணவுப் பதார்த்தங்களுக்கும் `ஓடர்' கொடுத்தாகிவிட்டது. ஆனால், விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டாமென்று திடீரென உத்தரவு வந்துவிட்டதால் அனைவரும் நிலைகுலைந்து போய்விட்டனராம்.
ஆகவே, வெளியாரை அழைக்காமல் உள்ளரங்கப் போட்டிகளாக சிறிய அடிப்படையில் நடத்தினார்களாம்.
"விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டி பரிசில்களைத் தட்டிக்கொள்ள ஆவலுடன் இருந்த மாணவர்களுக்கும் இதனால் மனத்திருப்தி. உணவுப் பதார்த்தங்கள் ஏராளமாகக் குவிந்திருந்ததால் மாணவர்களுக்கே விநியோகித்தோம்" என்றார். அந்தப் பாடசாலையின் அதிபர்.
எதிர்பாராமல் இத்தகைய உத்தரவுகள் வரும்போது சில தர்மசங்கடமான நிலை ஏற்படுவது இயற்கையே. ஆயினும், சங்கடத்தை சமாளிக்கும் வல்லமையுடையோரே புத்திமான்கள்!