பெய்ஜிங் : சீனா எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் கூடுதல் அணுமின் திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 11 அணு உலைகளை சீனா தற்போது இயக்கி வருகிறது. மின்சார தேவைகளுக்கு மூன்றாவது முக்கிய காரணியாக அணுமின் சக்தியை சீனா பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கிழக்கு சீனாவில் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய 3 அணு உலைகளை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
`அணுசக்தி திட்டங்கள் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் அனுபவம் வாய்ந்தது சீன அணுசக்தி துறை' என தேசிய வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஹென்வென்க் தெரிவித்தார். இவர் சீனாவில் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக கருதப்படுபவர்.
சீனாவில் மொத்த மின்சார உற்பத்தியில் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் 2 சதவீதமே பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் பார்க்கும் போது 16 முதல் 17 சதவீதம் வரை அணு உலைகளிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை சீனா பயன்படுத்துகிறது.
பிரெஞ்ச் நிறுவனத்துடன் 11.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் அணு உலைகளை அமைக்க சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 2009 ஆம் ஆண்டுக்குள் 1,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
சீனாவில் அனைத்து அணுமின் திட்டங்களும் கடற்கரையோரப் பகுதிகளிலேயே நிறுவப்படுகின்றன. இனிமேல் அமையப்போகும் அணுமின் திட்டங்களையும் கடற்கரையோரப் பகுதிகளிலேயே அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.