*அமெரிக்கா தெரிவிப்பு
வாஷிங்டன்: பாகிஸ்தானில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவென தெரிவித்துள்ள அமெரிக்கா நடைபெறவுள்ள தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முஷாரப் இதைப்புரிந்து கொண்டுள்ள போதிலும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பொதுத் தேர்தலை நடத்துவதாக அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ்;
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவது கடினம். வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தானின் தலைமை இதை உணர்ந்து கொண்டுள்ள போதிலும் ஜனநாயகத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு பொதுத் தேர்தலை நடத்தி மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவர்களின் அவசியமாக உள்ளது. பாகிஸ்தானில் அமைதியாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெற அந்நாட்டுக்குத் தேவையான உதவிகள் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை அமெரிக்கா மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அங்கு தேர்தல் நியாயமாக நடைபெறவது குறித்து சர்வதேச அமைப்புகள் கண்காணிக்கும்.
அரசியல் வேறுபாடுகளை மறந்து அமைதியான முறையில் தேர்தல் நடைபெற பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.