திலி : அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கிழக்குத் திமோருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் திலியில் நாட்டின் தலைவர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இரட்டைப் படுகொலை முயற்சிக்கெதிராக தமது பலத்த ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவே ரூட் இவ் விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்காக கிழக்குத் திமோர் ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ் கோட்டா சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ரூட் பிரதமர் ஸனானா குஸ்மாவோவுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
கிழக்குத் திமோரில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு நாம் பலமான ஆதரவை வழங்குவோமென்ற தெளிவான செய்தியை வெளிப்படுத்த வேண்டிய நேரமிதுவென இவ் விஜயத்திற்கு முன்பாக ரூட் தெரிவித்திருந்தார்.
ரூட்டின் விஜயத்தை முன்னிட்டு திலியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் மருத்துவ மனையிலிருக்கும் ராமோஸ் கோட்டாவையும் ரூட் சென்று பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்குத் திமோரின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் தாம் ஆராய விரும்புவதாக ரூட் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியை சுட முயன்றபோது அவரது படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அல்பிரடோ ரெய்னாடோவின் இறுதிச் சடங்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.