கோலாலம்பூர் :மலேஷியாவின் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தல் அறிவிப்பை அந்நாட்டின் தேர்தல் ஆணையாளர் அப்துல் ரஷீத் அப்துல் ரஹ்மான் நேற்று முன்தினம் உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
மேலும் இத்தேர்தலின் போது; 222 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓராண்டுக்கு முன்பாகவே இத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அந்நாட்டுப் பிரதமர் அப்துல்லா பதாவி நேற்றே பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டார்.
மலேஷியாவின் மக்கள் தொகை 2 கோடியே 70 இலட்சம் . இவர்களில் 60 சதவீதம் பேர் முஸ்லிம்கள், 25 சதவீதம் பேர் சீனர்கள். அவர்கள் பெரும்பாலும் புத்த மதம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். 7.8 சதவீதத்தினர் இந்துக்கள். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
11 மாநிலங்கள் அடங்கிய மலாய் தீபகற்பம் மலேயா என்றழைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு 1957 ஆகஸ்ட் 31 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. போர்னியோ என்றழைக்கப்பட்ட சபா, சாராவாக், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளும் சேர்ந்த 1963 இல் மலேஷியா என்ற நாடு உருவானது. இதையடுத்து 1965 இல் மலேஷியாவில் இருந்து சிங்கப்பூர் தனி நாடாகப் பிரிந்துவிட்டது.