என்ஜமினா : சாட் தலைநகர் என்ஜமினாவை கிளர்ச்சியாளர்கள் அண்மையில் கைப்பற்ற முயற்சித்ததைத் தொடர்ந்து அங்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அரச ஊடகம் மூலம் இவ் உத்தரவைப் பிறப்பித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி கிட்றிஸ் டிபி அவசரகால நிலைமை 15 நாட்களுக்கு நீடிக்குமெனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரவு நேர ஊரடங்கும் வாகனங்களின் நடமாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அரச இயந்திரம் சிறப்பாக செயற்படுகின்றமை மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நிறுத்துவதற்கும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளதாக டிபி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இச் சட்டம் வீடுகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தனியாரின் செய்தி நிறுவனங்களை கட்டுப்படுத்தவும் அதிகாரம் வழங்குகிறது.
கடந்த 2 ஆம் திகதி என்ஜமினா மீது தாக்குதலை ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் அதன் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன் ஜனாதிபதி மாளிகையையும் நெருங்கினர். தலைநகரை இரு நாட்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர் கிளர்ச்சியாளர்கள் சூடானின் கிழக்குப் பகுதி எல்லையை நோக்கி பின்வாங்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இம் மோதல்களின் போது 160 பேர் கொல்லப்பட்டதுடன் 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்ததாக அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கின்றது.
இத் தாக்குதல்களுக்குப் பின்னால் சூடான் இருப்பதாக டிபி குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.