யாழ். மாவட்டத்தில் செயற்பட்டுவரும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களையும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான செயல்திட்டங்களைத் தயாரித்து, அவற்றை செயல்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் வேண்டியுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை கடந்த திங்கட்கிழமை யாழ். செயலகத்திற்கு அழைத்து அவர் இதுவிடயமாக ஆராய்ந்துள்ளார்.
இச்சந்திப்பில் சர்வதேச அகதிகளுக்கான நிறுவனம், சிறுவர் நிதியம், தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம், `சென்ட்" நிறுவனம், மனித முன்னேற்ற நடுநிலையம் ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
யாழ். மாவட்டத்தில் யுத்த அனர்த்தங்களினால், பெற்றோரின் தொழிலின்மை காரணமாக பாடசாலைகளை விட்டு இடைவிலகிய சிறுவர்களின் தொகை அதிகமாகவுள்ளதாகவும் போஷாக்கின்மையால் மெல்லக்கற்கும் மாணவர்கள் தொகை கூடிவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, இம்மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கும் மாணவர்களுக்கு விசேட வகுப்புகளையும் பயிற்சிகளையும் வழங்க வேண்டியுள்ளது. பாடசாலையைவிட்டு வெளியேறும் மாணவர்கள் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருமான இலக்குகளையடைய சுயதொழில் பயிற்சி வழங்கவேண்டியுள்ளது. இவற்றைவிட வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்க வேண்டியதும் தேவையாகவுள்ளது எனவும் யாழ். அரச அதிபர் எடுத்துரைத்துள்ளார்.