*அமைச்சர் நஜீப் ஏ.மஜீத்
யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூடிய கவனம் செலுத்தியிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;
"திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் காணப்படும் அத்தியாவசிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இப்பிரதேச வீதி அபிவிருத்தியில் ஜனாதிபதியின் கமநெகும செயற்திட்டம் பாரிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளது. அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் கிராம மட்டங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அர சாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டங்கள் வெற்றியடைய பொதுமக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
இறுக்கமான யுத்த சூழ்நிலையிலும் கூட மக்களுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை. எமது பிரதேசத்தின் வேலைத் திட்டங்கள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதனால், எமது பிரதேச மக்களின் வாழ்வு நிம்மதியடையும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போதுதான் எமது மக்களின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து சகல இனங்களுக்குமான சமத்துவ உரிமைகளை வழங்கும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து வெளிநாட்டுத் தூதகரங்களுடன் பேசியுள்ளேன். இதனால், இப்பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்கொண்டு செல்ல முடியும். நாட்டில் புரையோடிப் போயுள்ள யுத்தம் இன்னும் சில காலங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும். அரசாங்கம் பயங்கரவாதிகளை தோற்கடித்து அவர்களிடமிருந்து கிழக்கை மீட்டது போன்று வடக்கையும் மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதில் அரசாங்கம் வெற்றிபெறுவது உறுதியாகும்" என்றார்.
மூதூர் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தேசநிர்மாண உட்கட்டமைப்பு அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரன்ஜித் டி சில்வா மற்றும் பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.