வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் பாடசாலைகளை விட்டு வெளியேறிய 300 மாணவர்களுக்கு முறைசாரக் கல்வித் திட்டத்தின் கீழ் கணினி பயிற்சிநெறி, உடையமைத்தல், ஆங்கில, சிங்களமொழி பயிற்சி, தட்டெழுத்து, சுருக்கெழுத்து, வீட்டு மின் இணைப்பு, மனை முகாமைத்துவப் பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
கணினிப் பயிற்சி நெறிகள் வட்டு. இந்துக் கல்லூரி, அராலி சரஸ்வதி மத்திய மகா வித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் ஆங்கில மெமோறியல் கல்லூரி, ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உடையமைத்தல் பயிற்சிநெறி சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயம், மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம், குட்டிப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன. விக்ரோரியாக் கல்லூரியில் உயர்நிலை ஆங்கில வகுப்புக்களும், இளவாலை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் சிங்களப் பாடநெறியும், பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி நெறியும் ஆரம்பமாகியுள்ளன.
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் வீட்டு மின் இணைப்புப் பயிற்சி நெறியும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் மனை முகாமைத்துவப் பயிற்சி நெறியும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளில் இணைந்துள்ள மாணவர்களுக்கு ஆறுமாத பயிற்சியின் பின் பொதுப்பரீட்சையில் சித்தி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.