மொனறாகலை தனமல்வில பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவி பொது மக்களே கொல்லப்படுகின்றனர். அதேபோன்ற சம்பவங்கள் தெரணியகலை பகுதியிலும் இடம்பெறாது, நாம் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் செயற்படவேண்டும்.
இவ்வாறு தெரணியகலை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் சமிந்த ருவான் கூறினார்.
பிரதேச சபைத் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்துபேசிய அவர்;
விடுதலைப் புலிகள் தெற்கில் மேற்கொள்ளும் தாக்குதல்களை வைத்து தெற்கில் வாழும் தமிழர்களை நாம் வெறுக்கக் கூடாது. தெற்கில் வாழும் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகவும் சகோதரர்களாகவும் வாழுகின்றனர். அவர்களை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
விடுதலைப் புலிகள் சிங்களவர்களை மட்டுமல்ல தமிழர்களையும் கொலை செய்கின்றனர். தமிழர்களும் இந்த நாட்டு மக்களே என்றார்.
பிரதேச சபைத் தலைவர் சம்பிக்க விஜேசிங்க தமது உரையில்; விடுதலைப் புலிகள் தெற்கில் தாக்குதல்களை நடத்தி வடக்கில் போராடும் படையினரை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஜனாதிபதியின் வழிகாட்டலில் எமது படையினர் திறத்துடன் போராடி வருகின்றனர்.
அண்மையில் நூரித்தோட்டத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் வந்திருப்பதாக கிடைத்த தகவலின் படி பொலிஸார் தேடுதல் மேற்கொண்டனர். அங்கு கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்திருப்பதாக தெரியவந்தது.
அந்த இளைஞன் தாக்குதல் ஏதும் நடத்த வந்தாரா என்பது எமக்கு தெரியாது என்றாலும் நாம் பாதுகாப்பாக செயற்பட வேண்டும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.