*ஐந்து ஊடக அமைப்புகள் குற்றச்சாட்டு
-எம்.ஏ.எம்.நிலாம்-
ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் தங்குதடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இதுவிடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியிருக்கும் ஐந்து ஊடக அமைப்புகள் ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தத்தவறினால் மோசமான நிலை ஏற்படலாமெனவும் தெரிவித்துள்ளது.
சிரச (எம்.ரீ.வி./ எம்.பீ.ஸி.) ஊடக நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் சுசில் கிதெல்பிட்டியவை சந்தேகிக்கப்படக்கூடிய குழுவொன்று பின்தொடர்வதாக அவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடுமெனவும் பாதுகாப்புத்தரப்பு இது விடயத்தில் பொறுப்புடன் செயற்பட்டதாக தெரியவில்லை எனவும் ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், ஷ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு என்பன கூட்டாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசில் கிதெல்பிட்டிய கடந்த 14 ஆம் திகதி காலை 8 மணியளவில் தமது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு புறப்பட்ட சமயத்தில் இனந்தெரியாத இருவர் அவரது வீட்டருகில் நடமாடியதாகவும் அதன் பின்னர் அவர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்றதாகவும் அதேபோன்று இரவு 7.45 மணியளவில் அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அதேநபர்கள் மீண்டும் அவரைப் பின்தொடர்ந்து வந்ததாகவும் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அண்மைக்காலமாக ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல், தாக்குதல்கள் போன்ற பல நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். இவற்றை பார்க்கும் போது ஊடகவியலாளர்கள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.
ஊடகவியலாளர் மீது அடக்குமுறையை பிரயோகித்து ஊடக சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டுப்போட எடுக்கப்பட்டுவரும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளின் பின்னணில் அரசியல் சக்திகளும் செயற்படுவது பகிரங்க இரகசியமானதொன்றாகும். இவற்றை அரசு கண்டுகொள்ளாமலிருப்பது கவலையளிக்கின்றது.
சுசில் கிதெல்பிட்டியவின் முறைப்பாடு தொடர்பாகவும் ஊடகதுறைக்கு விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அரசும் பாதுகாப்புத்தரப்பும் காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம் எனவும் ஐந்து ஊடக அமைப்புகளும் குறிப்பிட்டிருக்கின்றன.