தெஹிவளையில் இரும்பு வியாபாரம் செய்யும் இளம் குடும்பஸ்தரொருவர் கடந்த வியாழக்கிமை முதல் காணாமல் போயுள்ளார்.
புளத்கோபிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தெஹிவளையில் தந்தையுடன் இரும்பு வியாபாரம் செய்து வந்தவருமான ஒரு பிள்ளையின் தந்தையான வெள்ளச்சாமி ஜெகன் (வயது 29) என்பவரே காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பாக பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக தெஹிவளை, களுபோவில வீதியில், இரும்புக்கடையை தனது தந்தையுடன் நடத்தி வந்த இவர் சம்பவ தினம் புளத்கோபிட்டியிலிருந்து தெஹிவளைக்கு பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்டதாகவும் ஆனால், அவர் கடைக்கு வந்து சேரவில்லை என்றும் அவரிடம் சகல பதிவு ஆவணங்களும் அடையாள அட்டை என்பன இருப்பதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர் தொடர்பாக கொஸ்கம, மிரிகான, கோட்டை, கொகுவலை, புளத்கோபிட்டி பொலிஸாரிடம் விசாரித்த போதும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் தொடர்பாக உயர் மட்ட பொலிஸாருடன் பிரதி அமைச்சர் தொடர்பு கொண்டுள்ளார்.
இதேவேளை, கதிரேசன் வீதி, வி.எஸ். லொட்ஜில் தங்கியிருந்தவர்களான வட்டு மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வரதராசா பரமானந்தன் (வயது 24) மீசாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பதமரஞ்சன் (வயது23) ஆகியோர் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மோதரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மல்லிகாதேவி என்பவர் பிரதி அமைச்சரிடம் தெரிவித்ததோடு, இவர்களிருவரும் கடந்த 6 மாதங்களுக்கு மேல் கொழும்பில் தங்கியிருப்பதாகவும் வெளிநாடு செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இளைஞர்கள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குநர் நந்தன முனசிங்கவுக்கு பிரதி அமைச்சர் அறிவித்துள்ளதுடன் விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.