இத்தாலியில் நடந்த கால்பந்துப் போட்டியின்போது காயமடைந்த பிரேஸில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஓய்வுபெறும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிகிறது.
பிரேஸில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ இவர் மூன்று முறை `பிபா' சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வென்றுள்ளார். 1994 மற்றும் 2002 இல் அணி உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இவர் தற்போது ஏ.சி.மிலன் கிளப் அணிக்காக இத்தாலியில் நடக்கும் சீரி `ஏ' கால்பந்து தொடரில் விளையாடி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை நடந்த லிவர்னோ அணிக்கு எதிரான போட்டியின்போது திடீரென லிவர்னோ அணியின் ஜோஸ் விடிகலுடன் மோதிக் கொண்டார். இதில் காயமடைந்த ரொனால்டோ உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். `எக்ஸ்-ரே'யில் அவரது வலது முழங்கால் தசை நார் கிழிந்துள்ளமை தெரியவந்தது. இதேபோல் 8 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு காயமேற்பட்டது. அதிலிருந்து குணமடைய சில மாதங்களாகும் என கூறப்பட்டாலும் அவர் 100 சதவிகித உடற்தகுதியுடன் களமிறங்க மூன்று ஆண்டுகள் ஆனது.
இந்நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் உடனடியாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது 31 வயதான இவர் முழுமையாக குணமடைய குறைந்தது 9 மாதம் தேவைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் விரைவில் ஓய்வுபெறக்கூடும் என ஏ.சி.மிலன் அணியின் அதிகாரபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அதில் `ரொனால்டோவின் காயம் குணமடைய 9 மாதங்களுக்கு மேலாகும். இக்காயம் அவரது கால் பந்து வாழ்க்கையை முடித்துவிடக் கூடிய வாய்ப்புமுள்ளது' என்கின்றது.
ரொனால்டோவின் காயம் குறித்து ஏ.சி.மிலன் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்சிலாடி அளித்த பேட்டியில்;
ரொனால்டோவின் காயம் வருத்தமளிக்கிறது. அவரால் தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கவலை எங்களை வாட்டுகின்றது. அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்துவிட்டது என்று என்னால் கூற முடியவில்லை. காலம்தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்.
நாங்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புகிறோம். போட்டி முடிந்தவுடன் எங்கள் அணியின் அனைத்து வீரர்களும் அவரைப் பார்க்க ஆஸ்பத்திரி சென்றோமென்றார்.
விளையாட முடியும்? : ஏ.சி.மிலன் அணியின் டாக்டர் வால்டர் பாஸ்கேல் ரொனால்டோவினால் மீண்டும் விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்;
8 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததைவிட தற்போது மருத்துவத்துறை நன்றாக வளர்ந்துவிட்டது. அவரது காயம் குணமாகக் கூடியது தான் என்றாலும் எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது.' என்றார்.