ஐரோப்பிய நாடொன்றில் நீண்டகாலம் வசித்து அந்நாட்டுப் பிரஜையாகிவிட்ட ஒருவர், விடுமுறையில் இங்கு வந்திருந்தபோது தனது நண்பரின் இல்லத்துக்குச் சென்றார்.
நண்பரின் மனைவி, தனது இரு புதல்விகளையும் ஏதோ ஒரு விடயத்துக்காகக் கடிந்து கொண்டிருந்தார். "இனிமேல் எனக்குச் சொல்லாமல் எந்தப் பெண்ணுடனும் சேர்ந்து எங்காவது செல்வீர்களானால் அடிதான் கிடைக்கும்' என்றும் எச்சரித்தார்.
அந்த இரு யுவதிகளும் தலையைக் குனிந்த வண்ணம், இனிமேல் அப்படிச் செய்ய மாட்டோமென்று உறுதியளித்தார்கள்.
இதைப் பார்க்க, விருந்தாளிக்கு பேராச்சரியமாக இருந்தது.
அவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில், "நீங்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள். உங்கள், பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கக்கூடியதாக இருக்கிறது. நான் வசிக்கும் நாட்டிலோ நிலைமைவேறு. பிள்ளைகளைக் கண்டித்தால் அவர்கள் பொலிஸில் சென்று முறைப்பாடு செய்து பெற்றோரை கூண்டுக்குள் போட்டுவிடுவார்கள்" என்றார்.
மேல்நாடுகளில் நீண்ட காலம் தங்கியிருந்து விட்டுத் திரும்பும் இளசுகளால் அந்த மனோபாவம் இங்கு பரவாமல் இருந்தால் நல்லது.