பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மொத்தம் 5 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் மூன்று மனுக்களை தலைமை நீதிபதி அப்துல் ஹமீத் தலைமையிலான ஐந்து பேரடங்கிய குழு தள்ளுபடி செய்தது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெனாசிர் மற்றும் அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் பாகிஸ்தான் தேர்தலில் பங்கேற்க நாடு திரும்பினால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று ஜனாதிபதி முஷாரப் தெரிவித்து அதற்கான உத்தரவை வழங்கினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் காஸி ஹுசேன் அகமது, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல். (என்) கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முஷாரப் கொண்டு வந்த பொதுமன்னிப்பு வழங்கும் ஆணையானது அரசியல் சாசன விதிப்படி தகுதியானதா? என்று அவர்கள் தங்கள் மனுவில் கேள்வியெழுப்பியிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் அதாவது இராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பு வகித்த போது முஷாரப் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இத்தகைய பொதுமன்னிப்பு பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. ஆனால், இதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நவாஸ் ஷெரீப்புக்கு இத்தகைய பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை.
இதனால், அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பாகிஸ்தான் மக்கள் கட்சி புறக்கணிக்கவில்லை. இதன்மூலம் முஷாரப் ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்ததை பாகிஸ்தான் மக்கள் கட்சி மறைமுகமாக அங்கீகரித்தது.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஷாரப், தனது இராணுவத் தலைமைத் தளபதி பதவியைத் துறந்து ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், பொதுமன்னிப்பு வழங்குவதாக பர்வேஸ் முஷாரப் பிறப்பித்த ஆணை கடந்த மாதத்துடன் காலாவதியாகிவிட்டது.
ஆனால், முஷாரப் பிறப்பித்த ஆணைகள் செல்லும் என்றும் அது காலாவதியாகவில்லை என்றும் பாகிஸ்தானின் காபந்து அரசு கூறிவருகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க எந்த சட்டத்திலும் இடமில்லை. அதற்கு எந்த அரசுக்கும் அடிப்படை அதிகாரம் கிடையாது. இத்தகைய உத்தரவானது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.