உலகின் 35 சதவீதம் பேர் மலேரியா நோய் தாக்கும் அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலேயே இத்தகவல் வெளிவந்துள்ளது.
உலகில் மலேரியா நோயின் அபாயம் குறித்து ஆராய்வதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் பாப் ஸ்னோ தலைமையில் `மேப்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கென்ய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் இந்த அமைப்புக்கு `வெல்கம்' என்ற தன்னார்வ நிறுவனம் நிதியுதவி செய்து வருகிறது. உலகின் எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் மலேரியா இருக்கிறது என்பது குறித்து இந்த அமைப்பு வரைபட அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் சுமார் 237 கோடி பேர் மலேரியா தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 100 கோடி பேர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் குறைந்த அபாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றில் அபாயம் குறைந்திருப்பதாக அந்த வரைபடம் கூறுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் கொடையாளர்களும் பெரும் பணத்தைச் செலவழிக்கும்போது இதுபோன்ற வரைபடத்தைக் கையில் வைத்திருப்பது அவசியம் என்றார் ஸ்னோ. உலகின் எந்தெந்த பகுதிகளில் மலேரியாவை ஒழிக்க முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு இந்த வரைபடம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.