இந்தாண்டு பிரேஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வெல்வேன் என `நம்பர் 1` வீரரான சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் டெனிஸ் உலகின் `நம்பர்-1' வீரராக திகழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பன், யு.எஸ். ஓப்பன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்று சாதித்த போதிலும் பிரெஞ் ஓப்பனை வெல்ல முடியாமல் தவித்து வருகிறார். ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலிடம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறார்.
இம்முறையும் பிரெஞ் ஒப்பன் தொடரில் நடாலிடம் பெடரர் தாக்குப்பிடிக்க இயலாது என பரவலாக பேசப்படுகிறது. இது தொடர்பாக பெடரர் அளித்த பேட்டியில்,
அவுஸ்திரேலியன் ஓப்பனில் தோல்வியடைந்தது வருந்தமளிக்கிறது. அடுத்து வரும் தொடர்களில் வெற்றியை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன், பிரெஞ் ஓப்பனை கைப்பற்றுவது தான் லட்சியம். இது என்னுடைய கடைசி வாய்ப்பு என பலரும் பல விதமான கருத்துக்களை சொல்கிறார்கள். இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் டெனிஸ் வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட சிறந்த வீரரால் வெற்றி வாகை சூட முடியும். வெற்றிக்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன்.
அதிர்ஷ்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. களிமண் ஆடுகளங்களில் ஆரம்பம் முதல் ஆடி வருகிறேன். பிரெஞ் ஓப்பனில் இரண்டு முறை வெற்றி வாய்ப்புகள் இரு செட்களில் கைநழுவிப்போனது. இதில் என்னால் சாதிக்க முடியாதென்று சொல்வது அபத்தமானதென்றும் தெரிவித்தார்.