ஈராக்கில் புதைகுழி ஒன்றிலிருந்து சிதைவடைந்த நிலையில் நூற்றுக்கணக்கான மனித உடல்களும் எலும்புக் கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் வடபகுதியிலுள்ள ஹாலிஸ் பகுதியிலேயே இம்மனிதப் புதைகுழி ஈராக் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மற்றும் ஈராக் அதிகாரிகள் தெரிவிக்கையில்;
இச்சம்பவத்திற்கு யார் பொறுப்பென்பது இதுவரை தெரியவரவில்லை.
அத்துடன், இவ்வுடல்கள் குறிப்பிட்ட ஒருநாளில் புதைக்கப்படாமல் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறுபட்ட தொகைகளில் புதைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வுடல்கள் அமெரிக்க கூட்டுப்படைகள் 2003 இல் ஈராக்கிற்கு வருகை தந்ததன் பிற்பாடே புதைக்கப்பட்டிருக்கலாமெனத் தெரிவித்தனர்.
இப்புதைகுழி தொடர்பாக ஈராக் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அப்தெல் கரிம் அல்-ருபாயி தெரிவிக்கையில்;
இப்புதைகுழியில் தொடராக ஒரு சில மாதங்கள் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இவ்வுடல்களில் பெரும்பாலானவை எலும்புக் கூடுகளாகவே உள்ளன.
இதனால், அவற்றை அடையாளம் காண்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
மேலும், உடல்களோ எலும்புக்கூடுகளோ இப்புதைகுழியில் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மனித உரிமை ஆணைக்குழு, சதாம் ஹுசைனின் ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்களின் உடல்களே இதுபோன்ற வெவ்வேறு புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாமென தெரிவித்துள்ளது.
மேலும், ஈராக்கில் நடைபெற்ற இனரீதியான மோதல்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த பெப்ரவரியில் பாக்தாத்திலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலுள்ள சமாறாப் பகுதியிலுள்ள புதைகுழி ஒன்றிலிருந்து ஐம்பது உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இப்புதை குழிகளில் அல்-ஹைடா தீவிரவாத அமைப்பால் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களே புதைக்கப்பட்டிருக்கலாமென அல்-ஹைடா அமைப்பினர் மீது அமெரிக்காவும் ஈராக்கும் ஒருமித்த குற்றச்சாட்டை வெளிக்காட்டியுள்ளன.
ஆனால், இப்புதைகுழி தொடர்பாக, தமது அமைப்பு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அல்-ஹைடா இயக்கத்தினர் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.