* அமெரிக்க வெளியுறவுத்துறை
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அனைத்து உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணவேண்டுமென இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாம் கேஸியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இது அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன் சார்ந்ததுடன், அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான முயற்சியாகவும் இருக்கும்.
எனினும் ஒப்பந்தம் நிறைவேற வேண்டுமானால் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் இந்தக் காலத்தை உள்நாட்டு அரசியல் விவகாரங்களைத் தீர்ப்பதற்கான வாய்ப்பாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும்.
வரும் ஜூலை மாதத்துக்குள் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் முடித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கேஸியின் கருத்தும் அமைந்துள்ளது.