-அன்புமணி-
சித்தமருத்துவத்துறை தமிழ்மக்களின் பாரம்பரிய பொக்கிஷம் ஆகும். பக்கவிளைவுகள் இல்லாமல் சகல விதமான வியாதிகளையும் குணப்படுத்துவதற்கு சித்த வைத்தியத்தில் மருந்து வகைகள் உள்ளன. ஆனாலும், இக்காலத்தில் எவரும் இம் மருத்துவத்தை நாடுவதில்லை. அதனால் இம் மருத்துவத்துறை படிப்படியாக அருகி இன்று மறைந்து விடும் நிலையில் உள்ளது.
ஆனால், சிங்களவர் மத்தியில் ஆயுர்வேத வைத்தியத்துறை மக்களின் அக்கறையினாலும் அரசாங்க ஆதரவினாலும் இன்று பெருமளவில் முன்னேறியுள்ளது. "ஹெட்டிகொட குரூப்" நிறுவனத்தின் மூலம் இம்மருந்துகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
வெதமாத்தயா என்று அழைக்கப்படும் சிங்கள ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகின்றனர். அதேபோன்று தமிழ் மக்களிடையே சித்த மருத்துவர்கள் முக்கியத்துவம் பெற வேண்டுமானால் பல்கலைக்கழகத்தில் இம்மருத்துவத்துறை ஒரு கற்கை நெறியாக இடம்பெறவேண்டியது அவசியம் என மட்டக்களப்பு சித்த வைத்தியர்களால் வற்புறுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ க.தங்கேஸ்வரி மூலம் இவ்விடயம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கும், உயர்கல்வி அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் பல விரிவான அறிக்கைகளை அனுப்பியிருந்தார்.
1995/1996 முதல் 2006/2007 வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கற்கை நெறிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஒரு அட்டவணையாக இக்கடிதங்களில் சேர்க்கப்பட்டிருந்தது (இணைப்பு)
இவ்விடயம் தொடர்பாக 11.5.2005 முதல் 15.8.2007 வரை தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் இதன் முன்மொழிவுக் கடிதத்தை 11.5.2006 இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தார்.
ஆனால், நீண்டநாள் அதுகிடப்பில் கிடந்தது பின்னர் கற்கை நெறியின் உள்ளடக்கம் ( Course structure) மற்றும் பாடத்திட்டம் முதலியன 30.10.2005 இல் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
இதன் செயற்திட்ட அறிக்கை திருகோணமலை வளாகத் தலைவரால் தயாரிக்கப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அங்கீகரிக்கப்பட்டு 7.4.2006 இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவை பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரியும் அவரது குழுவினரும் நேரில் சந்தித்து நீண்டநேரம் இவ்விடயம் பற்றி விவாதித்தனர்.
அதன் பின் அமைச்சர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்காவுக்கு 17.6.2007 இல் அறிவித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். அதன்படி இவ்விடயம் நிலையியல் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இக்கற்கைநெறி `சித்தமருத்துவ கற்கைநெறி' என்பதற்குப் பதிலாக `பாரம்பரிய வைத்தியக் கற்கைநெறி' ( Traditional medicine) என மாற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் 738 ஆவது கூட்டத்தில் (19.7.2007) பின்வருமாறு இவ் வைத்தியத்துறையை நடத்தலாம் எனத் தீர்மானித்தது.
1. சித்தவைத்தியமாணி ( Bachelor siddha medicine)
2. ரணசிகிச்சை பட்டதாரி (Surgery Degree)
இக்கற்கை நெறியை 2008 ஆம் வருடம் முதல் திருகோணமலை வளாகத்தில் ஆரம்பிக்கலாம் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு 15.8.2007 திகதிக் கடித மூலம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக க.தங்கேஸ்வரி பா.உ. 21.08.2007 பாராளுமன்றத்தில் விரிவான உரை ஆற்றியுள்ளார்.
இக்கற்கை நெறி பின்வருமாறு அமையவேண்டும் என முன் மொழியப்பட்டுள்ளது:
கற்கைநெறி- சித்த மருத்துவ சத்திரசிகிச்சை மாணி
(அ). சித்த வைத்தியமாணி
(ஆ). சத்திர சிகிச்சைமாணி
மதிப்பீட்டு முறைகள் (அ). எழுத்து, (ஆ).வாய்மொழி, (இ). செய்முறை, (ஈ). உள்ளக வைத்தியப் பயிற்சி.
அடுத்த 3 வருடங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவரின் உத்தேச எண்ணிக்கை (அ) முதல்வருடம்:30, (ஆ) இரண்டாம் வருடம் :40, (இ) மூன்றாம் வருடம் :40.
தேவையான ஆளணி- அ) விரிவுரையாளர் 2, ஆ) சிரேஷ்ட விரிவுரையாளர் 2, இ) போதனாசிரியர் 2, ஈ)கல்விசாரா ஊழியர் 10.
கற்கை வசதிகள்: அ)வகுப்பறைகள் உள்ளன, ஆ)ஆய்வு கூட வசதிகள்: இருக்கும் வசதிகள் போதுமானவை.
அடுத்த 3 வருடங்களுக்குத் தேவையான கற்கை வசதிகள் : இருக்கும் வசதிகள் போதுமானவை.
செனட் அங்கீகாரத் திகதி : 21.09.2005
கழக அங்கீகாரத் திகதி : 24.09.2005
நிதி ஒதுக்கீடு: ரூ.91.1 மில்லியன்
கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அமைச்சு அங்கீகாரம்
தெரிவிக்கப்பட்ட திகதி 15.08.2007
கடித இலக்கம் UGC/1UA/1/IIM/TC