அம்பாறை தாண்டியடி கரடியன்குளத்தில் தாமரை இலை பறிக்கச் சென்ற ஒருவர் தாமரைக்கொடியில் சிக்கியதால் உயிரிழந்துள்ளார்.
இப்பரிதாப சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் விநாயகபுரம் -1 மாணிக்கப்பிள்ளையார் முன் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அருள்ராசா ஜெயந்திரன் (23 வயது) என்பவராவார்.
சம்பவதினம் தாண்டியடியில் கிறிஸ்தவ ஆலய விழா ஒன்றில் பங்குகொண்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக அருகிலுள்ள இக்குளத்தில் தாமரை இலை பறிக்கச் சென்றவேளை தாமரைக்கொடியில் சிக்கியதால் இவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு திருக்கோவில் பொலிஸார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு அனுப்பினர். பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.