தேசிய கல்வியியற் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகக் கிளை, வயம்ப பல்கலைக்கழகத்தின் வளாகம் போன்றவற்றை புத்தளத்தில் அமைத்து புத்தளம், ஆனமடுவ தேர்தல் தொகுதிகளின் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த இசுருபாயவில் நடைபெற்ற கூட்டத்தின்போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பணிப்புக்களை விடுத்துள்ளார்.
கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளின் பேரில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால ஆகியோரின் பணிப்பின் பேரில் கடந்த 05 ஆம் திகதி புத்தளம் கல்வி மேம்பாடு தொடர்பாக ஆராயும் கூட்டம் இசுருபாயவில் நடைபெற்றபோதே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய கல்வியியற் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகக் கிளை போன்றவற்றைப் புத்தளத்தில் அமைப்பதன் மூலம் கல்வியில் பின்தங்கியுள்ள புத்தளத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியும் என தாம் நம்புவதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த நிறுவனங்களை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமது அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு திறந்த பல்கலைக்கழக கிளையை புத்தளத்தில் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அதன் உபவேந்தருக்குக் கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.
புத்தளத்தில் கடல் நீர் ஏரி, தெங்குச் செய்கை, உப்பு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் அதிகமாக அமைந்துள்ளதால் குளியாபிட்டியில் இயங்கும் வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு வளாகமொன்றைப் புத்தளத்தில் அமைப்பது பற்றிய பிரேரணை கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாயிஸினால் இக்கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்டது.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு புத்தளம், ஆனமடுவ ஆகிய இரு தேர்தல் தொகுதிகளுக்கும் அதிகமாக ஆசிரியர்கள் தேவைப்படுவதால் அப்பாட நெறிகளைக் கொண்ட தேசிய கல்வியியற் கல்லூரியை அமைப்பதன் மூலம் அதில் பயிலும் பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு இவ்விரு தொகுதிகளிலுமுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும், அதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் இக்கூட்டத்தின் போது கல்வி அமைச்சரால் கூட்டிக்காட்டப்பட்டதோடு நிதி ஒதுக்கீடுகளைச் செய்து அக்கல்லூரியை ஆரம்பிப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் அவசரமாக கட்டிட வசதிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அவரால் கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவ்வாறான கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமானால் உடனடியாகவே அக்கல்லூரியை ஆரம்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி, உயர் கல்வி அமைச்சின் அலுவலர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சரின் தலைமையில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆப்தீன் யஹ்யா, என்.டீ.எம். தாஹிர், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சரின் அபிவிருத்திக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.