நீர்கொழும்பு வாராந்த சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நிறுவன அளவை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது முப்பத்தைந்து வியாபாரிகளிடம் முத்திரையிடப்படாத தராசுகளும், படிகளும் இருக்கக் கண்டு பிடிக்கப்பட்டன.
கம்பஹா கச்சேரியில் இருந்து வந்த இத்திணைக்கள அதிகாரிகள் சந்தையை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சில வியாபாரிகள் தமது விற்பனையிடங்களில் இருந்து தராசு படிகளுடன் மறைந்துவிட்டனர். இந்த முப்பத்தைந்து வியாபாரிகளில் பெண்களும் அடங்குவார்கள்.
இந்த வியாபாரிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 25 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் இச்சோதனைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியான புஸ்பகுமார தெரிவித்தார்.
தராசுகள்,படிகள், எண்ணெய் அளக்கும் அளவு கருவிகள் என்பனவற்றுக்கு வருடாந்தம் நிறுவை அளவைத் திணைக்களத்தில் பதிவு செய்து அதற்குரிய முத்திரையிடப்படாத (சீல் வைக்காமல்) வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தின் பல இடங்களிலும் இந்த நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேய்ந்த படிகள், தராசுகளை வைத்து வியாபாரம் செய்வோர் குறித்து நிறுவை அளவைத் திணைக்களத்துக்கு பொதுமக்கள் புகார் செய்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.