பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட செய்தி இணையத்தளமொன்றின் புகைப்படப் பிடிப்பாளரான கே.எஸ். விஜயசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 7 ஆம் திகதி இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றைய தினம் இடம்பெற்ற மேற்குறித்த செய்தி இணையத்தளத்தின் ஆசிரியரும் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமாகிய ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்தே விஜயசிங்கவும் கைதாகியிருந்தார்.
இதேநேரம், சம்பந்தப்பட்ட செய்தி இணையத்தளத்தை நடத்தி வந்தவரும் அச்சகமொன்றின் உரிமையாளருமான கே.யசீதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் கைதான சம்பவத்தை தொடர்ந்தே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் இவ்விவகாரம் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளருமாகிய எஸ்.சிவகுமார் சனிக் கிழமை இரவு விடுதலை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.