* விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
மன்னார் பகுதியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன் நகர்வு முயற்சிகளை தாம் முறியடித்துள்ளதாகவும் இதில் நடத்திய சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் படையினர் கடும் ஷெல் தாக்குதலுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட முன் நகர்வு நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மன்னாரின் மேற்குப்பகுதியில் பரப்பாங்கண்டலில் இருந்து காத்தான்குளம் நோக்கி படையினர் மேற்கொண்ட பாரிய எடுப்பிலான முன்நகர்வும் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை முதல் முன் நகர்வினை மேற்கொண்ட படையினருக்கு எதிராக காத்தான்குளம் அணைக்கட்டுப் பகுதியில் முறியடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் படையினர் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கினர்.
மன்னார் அடம்பன், பாலைக்குழிப் பகுதிகளிலும் படையினருடன் மோதல்கள் நிகழ்ந்தன.
இதில் விடுதலைப் புலிகளின் சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டனர்.
இதேவேளை, மன்னார் சேத்துக்குளம் பகுதியில் நேற்று படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தாம் முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாந்தைப் பகுதியில் சேத்துக்குளம் ஊடாக பாப்பாமோட்டையைக் கைப்பற்றும் நோக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.
பலத்த ஷெல் தாக்குதல்களுடன் டாங்கிகளின் உதவியுடன் படையினர் அதிகாலை 5 மணிக்கு பெருமெடுப்பில் முன்நகர்வை மேற்கொண்டனர். நண்பகல் வரை விடுதலைப் புலிகள் நடத்திய கடும் பதில் தாக்குதலையடுத்து படையினர் தமது பழைய நிலைக்கு பின்வாங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.