தோட்டத் தொழிற்துறையில் பணியாற்றுகின்றவர்களில் 56 வீதத்தினர் பெண்களாவர். எனினும் தொழிற்சங்க தலைமைத்துவத்தில் இவர்களுக்கு உரிய இடம்கொடுக்கப்படுவதில்லையென்று யுனிவெல்லோ நிறுவனத்தின் செயலாளர் நாயகம் எஸ்.முருகையா தெரிவித்தார்.
நாவலப்பிட்டி யுனிவெல்லோ நிறுவனத்தின் பெண்கள் பிரிவினால் நாவலப்பிட்டி நகரசபையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மகளிர் தின விழாவில் பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;
இன்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எமது நிறுவனத்தோடு இணைந்து செயற்படுகின்ற ஏனைய நிறுவனங்களோடு இணைந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல வன்முறைகளையும் நிறுத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும். சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் திகதியை தொழில் புரியும் சகல பெண்களுக்கும் சம்பளத்துடனான விடுமுறையாக அங்கீகரிக்க வேண்டும்.
பெருந்தோட்ட வறுமை ஒழிப்புத் திட்டத்தின்கீழ் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்மூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய 2006 - 2015 ஆண்டுக்கான பத்து வருட தேசிய வேலைத்திட்டத்தில் விசேடமாக மனித உரிமை மற்றும் பால்நிலை சமத்துவம் முதலான மகளிர் பிரிவிற்கு அமுல் செய்வதற்கான நிதியை ஒதுக்கீடுசெய்ய அரசு முன்வரவேண்டும்.
பிரதேச மாகாண மற்றும் பாராளுமன்ற சபைகளிலும் கூட்டுறவு சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 35 வீதம் அதிகரிக்க சட்டத் திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும். வெளிநாடுகளில் தொழில்புரியும் பெண்களுக்கு சமூக பாதுகாப்பும் தொடர்பாடலும் அமுல் செய்யும் வகையில் சட்டம் அமுலாக்கல் செய்யப்படுவதுடன் சகல தேர்தல்களிலும் பங்கு பெறும் வகையில் தபால்மூலம் வாக்களிக்கும் உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு, மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிங்கள, தமிழ் மொழிப் பயிற்சியை கிராம மட்டத்திலிருந்து சகலருக்கும் வழங்கும் வகையில் மொழி அமுலாக்கல் செய்யப்படல் வேண்டும். தினந்தோறும் மக்கள் மத்தியில் பயத்தையும், கொடூர மனித கொலைகளையும் ஏற்படுத்தி வருகின்ற தற்போதைய சிவில் யுத்தத்தை நிறுத்த சகல தரப்பினரும் செயல்படுவதுடன் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் விலை நிர்ணயம் செய்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும். பொருளாதார அபிவிருத்தியை நிவர்த்தி செய்யும் வகையில் சகல தரப்பினரும் கைத்தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு தேவையான பொருள்சார் நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற தீர்மானங்களை முன்வைத்துள்ளார்.