* ஐ.தே.க. கூறுகிறது
புகழ் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீனக் குழு இலங்கையில் தனது நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள எடுத்த தீர்மானத்துடன் மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக் காட்டியிருக்கிறது.
அத்துடன், சர்வதேச குற்றச்சாட்டுகளை தவிர்த்துக் கொள்ளும் திரையாக மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் அக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.தே.க. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;"மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்க இணக்கத்துக்கு வந்திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை தொடர்பாக அரசாங்கமோ மனித உரிமைகள் பற்றி அமைச்சரோ எதிர்க் கட்சியுடன் அண்மைக் காலமாக எந்த பேச்சுகளையும் நடத்தியிருக்கவில்லை. அவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உடன்படுவதாக எவருக்கும் அறிவிக்கவும் இல்லை.
புகழ்பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீனக் குழு இலங்கையிலிருந்து விலகிக் கொள்ள எடுத்த தீர்மானத்துடன், மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது.
இதேநேரம், மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிப்பதென்பது, சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளிலிருந்து, தப்பித்துக் கொள்ள பாவிக்கும் ஒரு திரையாக மட்டுமே இருக்கும். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உண்மையான தேவைப்பாடு இருப்பின், அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சபையை நியமிப்பதையே ஜனாதிபதி முதலில் செய்ய வேண்டும். இதுவே எதிர்க்கட்சியிலுள்ள சகல அரசியல் கட்சிகளினதும் சிவில் சமுகத்தினதும் கோரிக்கையாகும்.
அரசியலமைப்பு சபையின் மூலமே மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சபை நியமிக்கப்படாமையால் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது ஏற்றுக் கொள்ள முடியாத, நம்பிக்கை வைக்க முடியாத அளவிற்கு கீழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் பலவீனடைவதற்கு இதுவும் முக்கிய காரணியாகும்.
இதேநேரம், சாட்சியாளர்களை பாதுகாக்கும் மற்றும் குற்றங்களுக்கு ஆளாலான நபர்கள் தொடர்பான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டிருந்தாலும் பாராளுமன்ற ஆலோசனை குழுவுக்கு கூட இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த சட்டத்தை கூட நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையென்பது இதிலிருந்து தெளிவாகிறது.
அத்துடன், அடுத்த பாராளுமன்ற அமர்விலும் இது பற்றிய விடயதானங்கள் எதுவுமில்லை. எனவே, மனித உரிமைகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கத்திடம் பொறுப்பானதும் ஆழமானதுமான வேலைத் திட்டங்கள் எதுவுமில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.