விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கி உதவி புரிந்ததாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்;
நிதி நிறுவனங்கள், மின் மாற்றிகள் போன்றவற்றின் மீது தாக்குதல்களை நடாத்த புலிகள் தீட்டியுள்ள திட்டங்கள் தொடர்பான விபரங்கள் கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும்.
கைது செய்யப்பட்ட இரு விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒருவர் மட்டக்குளியை வதிவிடமாகக் கொண்டவர். மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் இவர் கையடக்கத் தொலைபேசி மூலம் அவசியமான தகவல்களைத் தெரிவித்து வந்துள்ளார்.
புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜெயரட்ண இவர்களை கைது செய்ததையடுத்தே ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இவர்கள் வழங்கும் தகவல்களே பெரும் உறுதுணையாக இருந்துள்ளன. இவர்கள் மிக மிக முக்கியமான பிரமுகர்களுடன் தொடர்புடையவர்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்கள் மூலமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடங்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.
இவர்களின் திரைப்படத் தயாரிப்பாளரான ஒருவர் இரு விடுதலைப் புலிகளுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து அவர்களது செயற்பாடுகளுக்கு உதவியுள்ளார்.
இந்த இரு புலிச் சந்தேக நபர்களும் முக்கியமான அரச கட்டிடங்கள் தொடர்பான தகவல்களை இரகசியமாக திரட்டி வந்துள்ளனர்.
மேலும் ஒரு விடுதலைப்புலி பெண் உறுப்பினர் வெவ்வேறு இடங்களில் அதி முக்கிய நபர்களின் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகி குறித்த நபர்களின் விபரங்களை பெற்று வந்துள்ளார்.
மேலும் ஒரு பெண் புலி உறுப்பினர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர் ஒருவரிடம் 1998 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிக் கொண்டே முன்னாள் இராணுவ அதிகாரிகள் மூலமாக அதிமுக்கியமான நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று வழங்கி வந்துள்ளார்.
அமைச்சர்களான ஹெகலிய ரம்புக்வெல, டக்ளஸ் தேவானந்தா, றஞ்சித் சியாம்பலப்பிட்டிய ஆகிய மூன்று அமைச்சர்களைக் கொல்வதற்கும் எரிபொருட்களை கொண்டுசெல்லும் புகையிரதம், புறக்கோட்டை உலக வர்த்தக மையம், களனி - விக்ரோறியா மேம்பாலம் ஆகியவற்றின் மீதும் நாட்டிலுள்ள பல்வேறு மின் மாற்றிகளை தகர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவரும் 1990 களில் இராணுவத்தில் பணியாற்றியவருமான இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இவர் மேற்குறித்த அமைச்சர்களில் ஒருவர் தொடர்பான தகவல்களை வழங்கி வந்துள்ளார். மற்றைய இராணுவ அதிகாரியும் விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.