அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியை மையமாக வைத்து கடந்த சில வாரங்களில் பல தடவைகள் பாரிய சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களை நடத்தி வரும் விஷேட அதிரடிப் படையினர் ஒவ்வொரு முறையும் அப்பகுதி மக்களை குடும்பம் குடும்பமாக வீடியோ படமெடுத்து வருவது குறித்து கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினரின் இந்தச் செயலால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். நேற்றும் ஆலையடிவேம்பு சின்னக்குளம், 7 ஆம் குறிச்சி பகுதிகளில் அதிகாலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடைபெற்றதுடன் படையினரால் மக்கள் வீடியோ படமெடுக்கப்பட்டுள்ளனர்.
இச்சுற்றிவளைப்புத்தேடுதலின் போது வீடு வீடாக சென்று தேடுதல் நடத்திய விசேட அதிரடிப்படையினர் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள் அனைவரையும் வயது வித்தியாசமின்றி கலாசார மண்டபத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணைக்குட்படுத்தினர்.
அதன்பின் அனைவரையும் குடும்பம் குடும்பமாக நிற்க வைத்து வீடியோ படம் எடுத்ததாகவும் பலர் நீண்ட நேர விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இத்தேடுதல் முற்பகல் 11 மணிவரை நடைபெற்றது. அலையடிவேம்பை மையமாக வைத்து இச்சுற்றிவளைப்பு தேடுதல் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாகவும் படையினர் திரும்பத் திரும்ப வீடியோ படமெடுத்து வருவதாக கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இது தொடர்பாக தாம் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், படை அதிகாரிகளுக்கு முறைப்பாடு தெரிவித்தும் தொடர்ந்தும் தாங்கள் வீடியோ படமெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.