கடந்த காலங்களில் ஷ்ரீலங்கா கடற்படையினரால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பல்வேறு கடற்பகுதிகளிலும் வைத்து புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இவ்வாறு அழிக்கப்பட்ட கப்பல்களிலிருந்த ஆயுதங்கள் அடங்கிய பெட்டிகளும் மேற்படி தாக்குதல்களின்போது அழிந்துபோன கப்பல்களின் சிதைவுகளுடன் சேர்ந்து கடலுக்குள் வீசப்பட்டன . பின்னர் கடற்படையினரால் கடலுக்கடியில் மேற்கொண்ட தேடுதல்களின்போது பெரிய ஆயுதப் பெட்டிகள் பல கண்டுபிடிக்கப்பட்ட போதும், அவை ஆயுதங்கள் எதுவுமின்றி வெறுமையாகவே இருந்தன.
மேற்படி வெறுமையான ஆயுதப் பெட்டிகளுடன் அழிக்கப்பட்ட புலிகளின் ஆயுதக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தின் மேற்கிலிருந்து அதாவது ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதியிலிருந்தே வந்து கொண்டிருந்ததால் வெறுமையாகக் காணப்பட்ட பெட்டிகளிலிருந்த ஆயுதங்கள் கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த எரித்திரியா நாட்டில் வைத்தே இறக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆயுதப் பெட்டிகளில் காணப்பட்ட விபரங்களுக்கேற்ப அவை அனைத்தும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட அதிநவீனமான யுத்த ஆயுதங்கள் எனவும், அவற்றில் பெரும் பகுதி பின்னர் புலிகள் இயக்கத்துக்குக் கிடைத்துள்ளன எனவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட புலனாய்வு விசாரணைகளிலிருந்து தகவல் தெரிய வந்துள்ளது.
பின்னர் அண்மையில் அநுராத புரம் விமானப்படை முகாம் மீது புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னர், அவர்கள் தப்பியோடிய போது விட்டுச் சென்ற ஆயுதங்களை கடற்படையினர் கண்டுபிடித்தனர். அவற்றைச் சோதனையிட்ட கடற்படையின் ஆயுதப் பரிசோதனைப் பிரிவினர் அவை சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட அதிசக்தி வாய்ந்த யுத்த ஆயதங்கள் என கண்டுபிடித்தனர்.
புலிகள் இயக்கத்துக்கு இந்த நவீன சீன ஆயுதங்கள் சீனாவிலிருந்து நேரடியாக வழங்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கமுடியாதெனவும், அவை புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளையுடைய எரித்திரியாவிலுள்ள குறித்த எரித்திரியா பாதுகாப்புப் படைத்தரப்பினரே புலிகள் இயக்கத்துக்குக் கொடுத்துள்ளதாகவும் தற்போது உயர்மட்ட விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு வட்டாரங்கள தெரிவித்துள்ளன. மேலும், இவ்வாறு எரித்திரியாவிலுள்ள இராணுவத்தினருள் ஆயுதத் திருட்டு, கடத்தல், ஆயுத வியாபாரம் ஆகிய மோசடிகளைச் செய்து வரும் ஒரு குறிப்பிட்ட இராணுவ உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு மேற்படி சீனத் தயாரிப்பு யுத்த ஆயுதங்களை புலிகள் இயக்கத்துக்கு வழங்கியிருப்பதாக மேலும் புலனாய்வு வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த அனுராதபுரம் விமானப் படைத்தளம் மீது புலிகள் இயக்கத்தினர் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சீன ஆயுதங்கள் பற்றிய புலனாய்வுகளை பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட வேளையில், குறித்த ஆயுதங்களைப் பரிசீலனை செய்து அவை பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆயுதப் புலனாய்வு, விசேட புலனாய்வுகளைச் செய்யும் புலனாய்வு வல்லுநர் குழுவையும் பாதுகாப்பு அமைச்சு அழைத்திருந்தது.
இதற்கேற்ப குறித்த அமெரிக்க ஆயுதப் புலனாய்வுக் குழுவினரும் தற்போது ஷ்ரீலங்காவுக்கு வந்துள்ளனர். இதுவரை பாதுகாப்பு புலனாய்வுக் குழுவினர் மேற்கொண்ட புலனாய்வுகள் பரிசீலனைகளிலிருந்து அனுராதபுரம் விமானப் படைத்தளத்தில் புலிகள் இயக்கத்தினர் விட்டுச் சென்ற மேற்படி சீன யுத்த ஆயுதங்கள் சீனாவில் சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நொறிக்கோ ஆயுத உற்பத்தி தொழிலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பீ.எவ்.89 வகையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த ஏவு கணைத் துப்பாக்கிகள் எனவும், இவை யுத்தகளத்தில் யுத்த தாங்கிகளைத் தாக்கி அழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கனரக ஆயுதங்கள் எனவும் இவ்வாறே, வேறும் பல சீன உற்பத்தி ஆயுதங்கள் உட்பட தீவிர தாக்குதல் சக்தி வாய்ந்த ஆயுதங்களும் மேற்படி அனுராதபுரம் விமானப்படை முகாம் தாக்குதலின்போது புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டன எனவும் உயர்மட்ட பாதுகாப்பு ஆயுதப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
திவயின:01.03.2008