சென்னையில் நடக்கும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சச்சின் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
சச்சின், இஷாந்த், ஹர்பஜன் ஆகியோர் குறைந்தது 2 வாரங்களாவது ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் முதல் போட்டியிலிருந்தே பங்கேற்க முடியுமென சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கோண ஒருநாள் தொடரில் இந்திய அணி சாம்பியன் கிண்ணத்தை வென்று புதிய வரலாறு படைத்தது. அடுத்து தென் ஆபிரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோதவிருக்கிறது. முதல் போட்டி சென்னையில் 26 ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான அணி வரும் 17 ஆம் திகதி தேர்வு செய்யப்படவிருக்கிறது.
இத்தொடரில் காயம் காரணமாக சச்சின் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த சச்சின் கூறுகையில்; "கடைசிப் போட்டியில் நன்றாக ஆட முடிந்தது. என்னைப் பொறுத்தவரையில் நான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன். தென்ஆபிரிக்காவுடன் நிச்சயம் விளையாடுவேன். அதில் எந்தச் சந்தேகமுமில்லை" என்றார்.
சமீபத்தில் முடிந்த முக்கோணத் தொடருக்கான அணியில் டிராவிட், கங்குலி இடம்பெறவில்லை. இதையடுத்து இவர்கள் இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் என செய்திகள் வெளியாயின. மூத்த வீரர்கள் களத்தடுப்பிலும் மந்தமாக இருப்பதாகவும் விக்கெட்டுக்கு இடையில் ஓட்டங்கள் எடுப்பதில் தடுமாறுவதாகவும் இக்குறைகளை களைய இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படுமென அறிவித்தது.
இந்நிலையில் டெஸ்டிலும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்று வருவதால் இவர்கள் தென் ஆபிரிக்க தொடரில் இடம்பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் முக்கோணத் தொடரிலிருந்து நீக்கப்பட்ட வீரர்கள் உடற்தகுதி சோதனையில் தேறினால் மட்டுமே அடுத்து நடக்கவிருக்கும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியுமென இந்திய கிரிக்கெட் சபை அதிரடியாக அறிவித்துள்ளது.
இதன்படி இவர்கள் அனைவரும் முழு உடற்தகுதி தேர்வு, பீப் டெஸ்ட் (சோர்வடையாமல் போட்டி முழுவதும் உற்சாகத்துடன் பங்கேற்க முடியுமா என்பதை கண்டறியும் சோதனை), உடல் வலிமைக்கான சோதனை மற்றும் களத்தடுப்பு பயிற்சி ஆகியவற்றில் தேற வேண்டும்.
கங்குலி, டிராவிட், லட்சுமண், கும்பிளே, ஆர்.பி. சிங் ஆகியோர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் டெஸ்டில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு என்ன காயம்?; இந்திய அணியின் சச்சின், தோனி உள்ளிட்ட 7 வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். இது தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சச்சின்; வலது இடுப்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் விளையாடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
தோனி: வலது கை ஆள்காட்டி விரலில் லேசான சுளுக்கு ஏற்பட்டுள்ளது.
யுவராஜ் சிங்: இடது முழங்காலில் காயமடைந்துள்ளார். இவர் 2 வார கட்டாய ஓய்வெடுக்க வேண்டும்.
இஷாந்த்: கை விரலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வெடுத்தாக வேண்டும்.
ஹர்பஜன்: இவருக்கு இடது கால் தசைநாரில் காயம். பந்துவீச்சு மற்றும் ஓட்டப்பயிற்சிகளில் ஈடுபட இரண்டு வாரமாகும்.
இர்பான் பதான்: உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துவதற்காக இரண்டு வாரங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் முதுகு பகுதி மற்றும் தோள் பகுதியை வலிமையாக்க தேவையான பயிற்சிகள் செய்யுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசாந்த்: இடது கணுக்காலை அசைக்க சற்று சிரமப்படுகிறார். விரைவில் தேறிவிடுவார்.