இஸ்ரேல் - பாலஸ்தீன அமைதிப் பேச்சுகள் ஸ்தம்பிதமடைந்திருக்கும் நிலையிலும் தான் பதவி விலகுவதற்கு முன்னர் மத்திய கிழக்கிற்கான அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த முடியுமென்பதில் தான் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.
புஷ் பதவி விலகுவதற்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் இவ் உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவைக்கு அதிகமான கால அவகாசம் இருப்பதாக புஷ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்களில் 120 இற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலுடனான பேச்சுகளை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் இடைநிறுத்தியுள்ளார்.
புஷ் இக்கருத்தை வெளியிட்ட சில மணி நேரங்களில் காஸாவிற்குள் நுழைந்த இஸ்ரேலிய கவச வாகனங்களின் தாக்குதலில் ஒரு மாத பெண் குழந்தையொன்று கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் பின் கருத்துத் தெரிவித்த புஷ்;
அவர்களை உறுதியான பேச்சுகளை முன்னெடுக்க வைக்க முடியுமென நான் நம்புகிறேன். 10 மாதங்கள் என்பது நீண்டகாலமாகும். எனவே, உடன்படிக்கையொன்றை அடைவதற்கு தேவைக்கு அதிகமான காலம் உள்ளது. இந்த ஏற்பாடுகளில் இருபடிகள் முன்னேறும் போது ஒரு படி பின்னடை ஏற்படுவது வழக்கமாகும். அதனால், ஒருபடி பின்னடைவு ஏற்படுவதை மட்டும் நாம் உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சியில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ், இஸ்ரேலிய பாலஸ்தீன தலைவர்களுடன் பேச்சுகளை நடத்திவரும் நிலையிலேயே புஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ் வருடத்திற்குள் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த முடியுமென்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக ரைஸும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.