* மகளிர் தின விழாவில் மக்கள் வங்கி முகாமையாளர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல தலைமைத்துவத்திலும் இன்று உயர்நிலையை அடைந்துவருகின்றனர். எமது சமூகத்தில் பெண்கள் தான் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சேமிப்புப் பழக்கத்தில் அதிகம் ஈடுபடுகின்றனர். வங்கிகளினால் அறிமுகப்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் ஒரு காலத்தில் ஆண்களே தமது சகோதரிகளுக்காகவும் தமது பிள்ளைகளுக்காகவும் சேமிப்புகளை ஆரம்பித்து வந்தனர். ஆனால், இன்று யாழ்ப்பாண சமூகத்தில் பாலியல் சமத்துவம் மேலோங்கியுள்ளதால், பெண்கள் உயர் நிலையையடைந்து, தமது சகோதரர்களின் நல்வாழ்வுக்காகவும் குடும்ப அங்கத்தவர்களுக்காகவும் சேமிப்பதில் அதிகம் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறு மக்கள் வங்கியின் வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் ரி.கே. ஆனந்தராஜா, மக்கள் வங்கியின் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் ஸ்ரான்வீதி மக்கள் வங்கிக்கிளையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
கிளை முகாமையாளர் சி. நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய உதவிப் பொது முகாமையாளர் ஆனந்தராஜா; "இன்றைக்கு வங்கிகளில் சேமிப்பில் ஈடுபடுபவர்களின் தொகையிலும் பார்க்க கடன் பெறுவோரின் தொகை அதிகரித்து வருகின்றது. இது வங்கிகளுக்கு பிரச்சினையாக மாறிவருகின்றது. இதன் காரணமாக வங்கிகள் வாடிக்கையாளர்களை பாதிக்காமல் சில வரையறைகளை கொண்டுவரவுள்ளன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வங்கி வறிய மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல வகையிலும் சிறிய கடன்களைக் கொடுத்து அவர்களை நல்லநிலைக்கு கொண்டுவர உதவியது. அப்போது வங்கிகள் இதனைச் செய்யக்கூடாது என பரிகாசம் செய்தவர்கள். ஆனால், இன்று எல்லா வங்கிகளுமே கருத்திட்டங்களுக்காக மக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன.
அபிவிருத்தி என்பது வறிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி வறுமையைப் போக்குவதாகும். எம்மைப் பொறுத்தவரையில், மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு சேமிக்கிறார்களோ அவவை மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கி நாட்டை அபிவிருத்தி செய்ய உதவும்.
மக்கள் வங்கி பெண்களுக்காக ஒவ்வொரு வருடமும் புதிய புதிய சேமிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்து அவர்களை சேமிப்பில் ஊக்குவித்து வருகின்றது. இன்று அறிமுகமாகியுள்ள "வனிதா வாசனாவ" நிலையான சேமிப்புச் சான்றிதழ் பரிசு எனும் சேமிப்புத் திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் பெண்கள் உயர்வடைந்து வருவதற்கு நல்ல சான்றாக நாம் கல்வி சாராத போட்டியொன்றை நடாத்தியபோது, இப்போட்டியில் ஐந்து பரிசுகளையும் பெண்கள் தான் சுவீகரித்துக் கொண்டனர்" என்றார்.
வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர் திருமதி தர்சினி நிசாந்தன் உரையாற்றுகையில்; "சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிக்கும்போது அதற்கான கோட்பாடுகளையும் வரைவிலக்கணங்களையும் நன்கறிந்து எதிர்கொள்ளும் தடைகளை நீக்க வேண்டும்.
எமது பிரதேசத்தில் ஆண், பெண் சமத்துவம் மேலோங்கிவருகின்றது. குடும்ப வன்முறைகள் குறைக்கப்பட வேண்டும். பெண்கள் தமது திறமைகளையும் ஆற்றலையும் சமுதாய மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் போது பெண் அடிமை நீங்கிவிடும்.
அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனம்விட்டுப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியாமல், மனத்திலே தேக்கி வைப்பதால், பொறாமையும் கோபமுமே வளர வாய்ப்புண்டு. எதையும்தாங்கும் இதயமாக நல்லதையே சிந்திக்க வேண்டும். உயர்ந்த குறிக்கோளுடன் வாழவேண்டும்" என்றார்.
வங்கி முகாமையாளர் சி. நித்தியானந்தன் தலைமையுரையாற்றுகையில்;
சர்வதேச மகளிர் தினம் மகளிர்களுக்கு மட்டும் உரியதல்ல. அது எல்லோருக்குமுரியது. பெண்கள் சமத்துவமாக வாழ ஆண்களது பங்களிப்பு அவசியம். பால்நிலை வேறுபாடுகள் இல்லாத சமுதாயம் உருவாகும்போது நாடு அபிவிருத்தி காணும்.
பெண்கள் சிக்கனமாக இருந்தால்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எனவே, சேமிப்பு என்பது குடும்பத்தின் சுபிட்சம்" என்றார்.
மக்கள் வங்கியின் மாவட்ட முகாமையாளர் எஸ். ஹென்றி உரையாற்றுகையில்;
"வாடிக்கையாளர்கள்தான் வங்கியின் முதலீட்டாளர்கள். அவர்கள் சேமிக்கும் மனம் தான் வங்கியின் நலத்திட்டங்களுக்கு மூலதனமாகவுள்ளது. மக்களின் சேமிப்பு அதிகரிக்க நாட்டின் அபிவிருத்தியும் அதிகமாகும்" என்றார்.