* காலி வீதியில் பூந்தொட்டிக்குள்ளிருந்து வெடிப்பு
கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு மாணவர்கள் உட்பட ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர்.
வெள்ளவத்தை ஈ.ஏ.குரே மாவத்தைக்கு முன்பாக காலி வீதியின் நடுவே வீதித்தடுப்பு பகுதியிலுள்ள பூந்தொட்டியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திமிக்க குண்டே நேற்றுக் காலை 6.50 மணியளவில் வெடித்துள்ளது.
பூந்தொட்டியினுள் கிடந்த சிறிய பார்சலொன்றை அங்கு வந்த ஒருவர் எடுத்து பிரித்துப் பார்க்க முயன்றபோதே குண்டுவெடித்துள்ளது.
இதனால், பார்சலை பிரிக்க முற்பட்டவர் அவ்விடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காலி வீதியின் நடைபாதையால் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த இரு மாணவிகள் உட்பட நான்கு மாணவர்களும் இரு பொதுமக்களும் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்பால் அவ்வீதியின் நடுவேயிருந்த தடுப்புக் கம்பிகளும் பலத்த சேதமடைந்ததுடன், வீதியின் இரு மருங்கிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதங்களேற்பட்டுள்ளன.
பாரிய குண்டுச் சத்தத்தால் அந்தப் பிரதேசமே அதிர்ந்தது. இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த படையினரும் பொலிஸாரும் காலி வீதியூடான போக்குவரத்தை தடை செய்ததுடன், படுகாயமடைந்தவர்களை வாகனங்கள் மூலம் களுபோவில ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
வீதி மூடப்பட்டதால், தெஹிவளை பக்கமிருந்து வந்த வாகனங்கள் யாவும் ராமகிருஷ்ண வீதியூடாக திருப்பப்பட்டு கடற்கரை வீதியூடாகச் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதேபோல் பம்பலப்பிட்டி பக்கமிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தையால் திருப்பப்பட்டு ஹமில்ரன் வீதியால் அனுப்பப்பட்டன.
குண்டுவெடித்த அச்சத்தாலும் போக்குவரத்துக்களில் ஏற்பட்ட பெரும் தடையாலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. முற்பகல் 11.30 மணிவரை இந்தப் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த படையினரும் பொலிஸாரும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் விசாரணைகளையும் நடத்தினர்.
அப்பகுதியில் சுற்றித்திரியும் ஒருவரே, குண்டுப் பார்சலை திறக்க முற்பட்டபோது, உயிரிழந்தவராவார். படுகாயமடைந்த ஆறுபேரும் களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரு மாணவிகள் அவசர சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர்.
இதில் இரு மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாயிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்த மாணவர்களில் ஒருவருக்கு கால்முறிவும் வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்களுமேற்பட்டுள்ளன.
இந்த நான்கு மாணவர்களும், மிலாகிரிய சென். போல்ஸ் மற்றும் பம்பலப்பிட்டி சென். மேரிஸ் பாடசாலைகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற போது, பாடசாலைகளுக்கு மாணவர்கள் பெருமளவில் சென்று கொண்டிருந்ததால், அச்சம் காரணமாக பின்னர் அவர்களில் பலர் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.
குண்டுவெடிப்பையடுத்து அந்தப் பகுதிக்கு பெற்றோர் பலர் விரைந்து வந்து பிள்ளைகளைத் தேடிக் கொண்டிருந்ததையும் காணமுடிந்தது.
இதேநேரம் அப்பகுதியில் வீதி இரு புறமும் மூடப்பட்டதால் வீதி முற்றாக வெறிச்சோடிக்கிடந்தது. முற்பகல் 11 மணிக்கே, கொல்லப்பட்டவரது சடலம் அங்கிருந்து அகற்றப்பட வீதித் தடைகள் நீக்கப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் அஜித் தாபரே என்பவரே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரது சடலம் பின்னர் களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விடுதலைப்புலிகளே இந்தக் குண்டுவெடிப்புக்கு பொறுப்பென அரசும் படைத்தரப்பும் தெரிவித்துள்ளன.