* நண்பகலுக்கு பின் நகர் வெறிச்சோட்டம்
எம்.ஏ.எம்.நிலாம்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மட்டு. நகரில் நேற்றுக் காலை மக்கள் நடமாட்டம் ஓரளவிருந்த போதும் நண்பகலுக்குப் பின்னர் நகர் முற்றுமுழுதாக வெறிச்சோடிப் போனது.
நேற்றைய தேர்தலுக்குக்காக மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படையினரும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மட்டு.நகரின் சகல பகுதிகளிலும் முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கவசவாகனங்களும் ட்ரக்குகளும் பெருமளவில் நிறுத்தப்பட்டு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த அதேநேரம், நகரில் வாக்களிப்பு நிலையங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் 6000 பொலிஸாரும் 1,750 விஷேட அதிரடிப்படையினரும் 1,750 இராணுவத்தினரும் 700 கடற்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
வாழைச்சேனைப் பகுதியிலேயே 10 இற்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஏனைய பகுதிகளில் ஒரு சில சம்பவங்களே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்குகள் எண்ணப்பட்ட மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பாதுகாப்பு முழு அளவில் அதிகரிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள இந்தப் பாடசாலையின் பாதுகாப்பை கருதி இவ்வீதியின் இரு பகுதிகளும் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது.
தேர்தல் வன்முறைகள் இடம்பெறலாமென்ற அச்சத்தில் நகரிலும் புறநகர் பகுதியிலும் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்தேயிருந்தது.