யாழ்ப்பாண சென்.பற்றிக்ஸ்கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையில் 91 ஆம் ஆண்டாக நடைபெற்ற "பொன் அணிகள்" மோதிய கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
இப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முதல் இனிங்ஸில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பின்னர் முதல் இனிங்ஸில் ஆடிய யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கெட் அணி சகலவிக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பலோ - ஒன்பெற்று இரண்டாவது இனிங்ஸில் ஆடிய யாழ்ப்பாணக்கல்லூரி அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
இப்போட்டி இருபத்தைந்தாவது தடவையாக வெற்றிதோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக யாழ்ப்பாணக்கல்லூரியைச் சேர்ந்த ஜெ.செந்தூரன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த ஆட்டக்காரராக சென்.பற்றிக்ஸ் அணி வீரர் சி.மிரண்டாவும், எம்.ஜே.மனோஜுரிம் தெரிவாகினர். சிறந்த பந்து வீச்சாளராக யாழ்ப்பாணக்கல்லூரி வீரர் எம்.வி.கமில்ரனும் தெரிவாகினார்.
ஸ்கந்தா அணி இனிங்ஸால் வெற்றி
இதேநேரம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிக்கும் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி அணிக்கும் எட்டாவது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் நாற்பத்தைந்து ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த வெள்ளி,சனிக்கிழமைகளில் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களைப் பெற்றது.
பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஜனக்கல்லூரி அணி முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸில் விளையாடிய மகாஜனக்கல்லூரி அணி 84 ஓட்டங்களைப் பெற்று சகலவிக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவிக் கொண்டது.