சான்டியாகோவில் நடைபெற்ற உலக ஹொக்கி தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் இந்தியா படுதோல்வியடைந்தது. இதனால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஹொக்கி அணியின் கனவு தகர்ந்தது.
ஒலிம்பிக் போட்டிகளில் 1928 ஆம் ஆண்டு முதல் ஹொக்கியில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை 8 முறை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று உலகின் வலுவான ஹொக்கி அணியாக முன்னிலை பெற்று விளங்கி வந்தது.
இந்த நிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் சான்டியாகோவில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா, பிரிட்டனுடன் மோதியது.
இதில் முதல் பாதி ஆட்டத்தில் பிரிட்டன் அடுத்தடுத்து 2 கோல்களை போட்டது. ஆனால், இந்திய வீரர்கள் கோல்போடுவதற்கு தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன் படுத்தி கொள்ளாததால் கோல் எதுவும் போடாமல் 2-0 என்ற கோல் கணிக்கில் தோல்வியடைந்தது. இதனால், இந்த ஆண்டு நடை பெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1928 ஆம் ஆண்டு முதுல் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் இந்திய ஹொக்கி அணி, 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டிருப்பது 80 வருடங்களில் இதுவே முதல் முறையாகும்.
இப் போட்டியில் வெற்றி பெற்ற பிரிட்டன் வீரர்கள் மகிழ்ச்சி கீதம் இசைத்து கொண்டாடினார்கள். ஆனால், இந்திய வீரர்கள் தங்களது தலைகளை தொங்க போட்டுக் கொண்டு சோகமாக நின்று கொண்டிருந்தனர்.
இந்தப் போட்டியின் போது இந்திய வீரர்கள் சர்தாரா சிங் மற்றும் பிரப்ஜோத் சிங் ஆகியோர் மஞ்சள் அட்டை காட்டி மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற் படுத்தியது.