* மட்டு. தேர்தலில் வெற்றிபெற்றோருக்கு தலா ரூபா 20 இலட்சம்; அரசு அறிவிப்பு
ரொஷான் நாகலிங்கம்
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களது பிரதேசங்களை மிகத்துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு தலா 20 இலட்சம் வழங்கப்படவுள்ளதாக ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வேட்பு மனுத் திகதியை அறிவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடிதம் மூலம் தேர்தல் ஆணையாளரைக் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அப்பகுதி மக்கள் தமது பிரதிநிதிகளை தற்போது சுதந்திரமாக நடைபெற்று முடிந்த தேர்தலில் தெரிவு செய்துள்ளனர். எதிர்காலத்தில் கிழக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை மாகாணசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் தெரிவுசெய்யக் கூடிய வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளதுடன், அங்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு உட்பட 59%மான வாக்களிப்பு அங்கு இடம்பெற்றுள்ளன. 1994இல் இடம்பெற்ற தேர்தலில் நுவரெலியா மற்றும் பதுளையிலேயே அதிகளவான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளன. அதேபோன்று கோரளைப்பற்று மற்றும் கோரளைப்பற்று வடக்கில் 79.56 மற்றும் 68.87 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து மக்கள் எந்தவித சிக்கலுமின்றி சுதந்திரமாக வாக்குரிமையைப் பாவித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்கில் சுதந்திரமாகத் தேர்தல் இடம்பெறமாட்டாதென எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
ஆனால், அங்கு எந்தவித வன்முறையும் இடம்பெறாது தேர்தல் இடம்பெற்றுள்ளது. இதனை பவ்ரல் அமைப்பும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. உண்மையில் அங்கு ஜனநாயகமாக தேர்தல் இடம்பெற்றுள்ளது.
ஏனெனில் அப்பிரதேச மக்கள் இன, மத, பேதம் பார்க்காது தமக்குப் பணியாற்றக் கூடிய பிரதிநிதிகளை தெரிவுசெய்துள்ளனர். மட்டக்களப்பு நகர சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணியில் இருந்ததெனினும் ஒரு சில பகுதிகளில் இதனைப் பின்தள்ளி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் முதல் நிலை வகித்தனர்.
அதேபோல் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் கூட 2ஆம், 3ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் ஜனநாயகமாகவும் சுதந்திரமாகவும் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்துள்ளனர் என்பது புலப்படுகின்றது.
எதிர்க்கட்சிகள் ராஜபக்ஷ சகோதரக் கம்பனியென எமது அரசு மீது சேறு பூசினர். அவர்கள் மூலமே கிழக்கு விடுவிக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு ஜனநாயகம் உதயமாகியுள்ளது.
ஜனாதிபதி பயங்கரவாதிகளைத் தோற்கடிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதாபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய உத்தரவின் பேரிலேயே கிழக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜனாதிபதி கிழக்கின் உதயத்தை பசில் ராஜபக்ஷவிடம் கையளித்தார். அவர் மேற்கொண்ட அபிவிருத்திகள் காரணமாகவே மக்கள் இத்தேர்தலில் எந்தவித சிக்கலுமின்றி பங்குபற்றியுள்ளனர்.
அரசாங்கம் நிலப்பகுதியை விடுவித்து தனது ஆளுகைக்குள் வைத்திருக்க ஒருபோதும் விரும்பவில்லை. விடுவிக்கப்பட்ட நிலப்பகுதி மக்கள் தம்மை தாமே ஆள்வதற்கே இந்தத் தேர்தலை நடத்தியது. அதேபோல் மாகாணசபை தேர்தலையும் எதிர்காலத்தில் நடத்தும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு திகதியை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன் அறிவிக்குமாறு தேர்தல் ஆணையாளரை ஜனாதிபதி கடந்த 7ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார். அத்துடன், அவருக்கு இதனை அறிவிக்குமாறு மேலும் 7 நாள் கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் வேட்பு மனுத் திகதியை அவர் தெரிவிப்பார்.
கிழக்கில் துரித அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இதனை மேலும் ஊக்குவிக்க தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும் 20 இலட்சம் வழங்கி அவர்களது பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
ரூபவாஹினி நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆர்ப்பாட்டத்தின் முன்னால் ஐ.தே.க. பிரதிநிதிகளே கொடிகளை தூக்கி சென்றுள்ளனர். தொழிற்சங்கமென்ற பெயரில் இவ்வாறு பின்னால் இருந்து அழுத்தம் கொடுப்பது எந்தவகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.