* மட்டக்களப்பு மாநகர சபை ஐ.ம.சு.கூ.வின் வசம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 உள்ளூராட்சி சபைகளுக்கும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 8 பிரதேச சபைகளின் நிர்வாகத்தைக் கைப்பற்றியிருக்கும் அதேசமயம், அக்கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாநகர சபையை தன்வசமாக்கியுள்ளது.
மாவட்டத்தின் 9 உள்ளூராட்சி சபைகளுக்குமான 101 ஆசனங்களில் 72 ஆசனங்கள் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்துள்ளன.
இங்கு அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தலானது சகல மக்களும் சுதந்திரமாகவும் சௌஜன்யத்துடனும் வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் குறிக்கோளை கோடிட்டுக் காட்டியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினத்தில் பாரிய வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆயினும் பலவந்தமாக வாக்களிக்குமாறு சிலர் நிர்ப்பந்திக்கப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்களில் வெற்றி பெற்றதுடன் போனஸ் ஆசனங்கள் 2 உடன் 11 ஆசனங்கள் அக்கட்சிக்குக் கிடைத்துள்ளது. இச்சபையில் சுயேச்சைக்குழு-1 இற்கு 6 ஆசனங்களும் , ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணிக்கு தலா 1 ஆசனமும் கிடைத்துள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு போனஸ் ஆசனங்களுடன் 7 ஆசனங்களும் , சுயேச்சைக்குழுவுக்கு 2 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
மண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 7 ஆசனங்களையும் சுயேச்சைக்குழு 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையில் 8 ஆசனங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெற்றுள்ளதுடன் 1 ஆசனம் சுயேச்சைக்குழு வசமாகியுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேச சபையில் 7 ஆசனங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் 2 ஆசனங்கள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் கிடைத்துள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 10 ஆசனங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு 2 ஆசனங்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கும் , சுயேச்சைக்குழு- 1 இற்கு ஒரு ஆசனமும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 1 ஆசனமும் கிடைத்துள்ளது.
கோரளைப்பற்று பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு 6 ஆசனங்களும், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 2 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்களும் சுயேச்சைக்குழு- 1 இற்கு 1 ஆசனமும் கிடைத்திருக்கின்றது.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 10 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
மண்முனை மேற்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 6 ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 மூன்று ஆசனங்களையும் பெற்றுள்ளன.