பாகிஸ்தான் பாராளுமன்றமும் மாநில சட்டப்பேரவைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான உத்தரவின் பேரில் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் கடந்த செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளார்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு பெப்ரவரி 18 ஆம் திகதி தேர்தல் நடந்தது. ஜனாதிபதி முஷாரப்பை ஆதரிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சி தோல்வியைச் சந்தித்தது. அதேசமயம் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வலு கிடைக்கவில்லை.
ஆசிப் அலி சர்தாரியைச் துணைத் தலைவராகக் கொண்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியும் கூட்டாக அரசை அமைக்க முடிவு செய்துள்ளன. இவ்விரு கட்சிகளும் இணைந்தால் ஆட்சி அமைக்கும் வலு கிடைக்கிறது.
கடந்த ஆண்டு நெருக்கடி நிலையின்போது ஜனாதிபதி முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்ற கொள்கை முடிவை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டாக எடுத்துள்ளன.
மத்தியில் கூட்டணி அரசை ஏற்படுத்தவும் இவ்விரு கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முஷாரப் செய்த தந்திரங்கள் பலிக்கவில்லை. அவருடைய எதிர்காலமே இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. புதிய அரசு பதவி ஏற்றுக்கொண்டதன் பிறகே நிலைமை மெல்ல மெல்ல தெளிவுபெறும். இப்போதைக்கு கூட்டணி ஆட்சி ஏற்படுவது உறுதியாகிவிட்டது.
இனி தன்னால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்டுவிட்ட முஷாரப், புதிய ஆட்சியை வரவேற்றிருக்கிறார். புதிய அரசு தன்னுடன் சுமுகமாக இருக்கும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள முஷாரப், அரச அமைப்புகளுடன் மோதல் போக்கு இல்லாமல் புதிய அரசு நடந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.