அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராவதற்கு மிசிசிப்பி மாநிலத்தில் நடைபெற்ற ஆரம்பகட்டத் தேர்தலில் செனட்டர் பராக் ஒபாமா வெற்றி பெற்று தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு குடியரசுக் கட்சியின் சார்பில் மக்கெய்ன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற்கு ஹிலாரி கிளின்டன் மற்றும் பராக் ஒபாமா இடையே தொடர்ந்தும் போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மிசிசிப்பி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 60% வீதத்திற்கு 37% வீதமென ஹிலாரியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் பராக் ஒபாமா.
இருந்தாலும் இதுவரை பெற்றுள்ள தேர்தல் முடிவுகளின் மூலம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு முடியாத நிலையுள்ளது.
மிசிசிப்பி மாநிலத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பராக் ஒபாமா 20 பேராளர்களையும் ஹிலாரி கிளின்டன் 11 பேராளர்களையும் தம்வசப்படுத்தியுள்ளனர்.
இதன்படி இதுவரை நடந்த 42 மாநிலங்களுக்கான தேர்தலில் பராக் ஒபாமா 26 மாநிலங்களில் வெற்றிகொண்டு 1596 பேராளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், 16 மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள ஹிலாரி 1484 போராளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
ஆனால், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற்கு 2025 பேராளர்களின் ஆதரவைப் பெற்றிருக்கவேண்டுமென்ற நிலையில் இருவரும் தொடர்ந்து தீவிர பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பத்துக்கு ஒன்பது கறுப்பினக்காரர்கள் ஒபாமாவுக்கு வாக்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அங்கு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு போட்டியாளர்களும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.