எம்.ஏ.எம்.நிலாம்
வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாக இலங்கையர்களை அனுப்புவதை இவ்வருடத்துடன் முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
வெளிநாட்டவர்களின் அடுப்பங்கரை வேலைக்கும் துணி துவைக்கும் வேலைக்கும் எமது பெண்களை அனுப்பி நாட்டின் கௌரவத்தை விலைபேச வேண்டாமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து அமைச்சுகளினதும் செயலாளர்களது சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்ட உத்தரவை விடுத்திருக்கின்றார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் சகல அமைச்சுகளதும் செயலாளர்கள், பதில் செயலாளர்கள், அமைச்சு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
"வெளிநாட்டவர்களின் எடுபிடி வேலைக்கு எமது நாட்டு பெண்மணிகளை பணத்துக்கு ஆசைப்பட்டு அனுப்புவதை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை எமது மக்கள் உணர வேண்டும். தாதிமார்களாகவோ மருத்துவ உதவியார்களாகவோ பயிற்சிபெற்ற பெண்கள் நியாயமான சம்பள அடிப்படையில் வேலைக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கலாம்.
நாட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படக்கூடிய விதத்திலேயே சமீபகாலமாக வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் எமது பெண்கள் அவமதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் வெறுங்கையுடன் நாடு திரும்புவதைக் காண முடிகிறது. இந்த அவலம் தொடர இடமளிக்கக்கூடாது. எனவே, இவ்வாண்டு இறுதியுடன் பணிப் பெண்களாக இலங்கைப் பெண்கள் எவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது. டிசம்பர் 31 ஆம் திகதியுடன் அதற்குத் தடை போடப்பட வேண்டும்" எனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுச் சேவைகளுக்குச் செல்லும் அரச ஊழியர்களின் வெளிநாட்டுச் சேவைக் காலத்தை மூன்று வருடங்களுக்கு கட்டுப்படுத்துமாறும் மூன்று வருடம் முடிந்தும் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு அந்த இடங்களுக்கு புதியவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.