அண்மையில் நோர்வேயிலுள்ள றேன் எனப்படும் விசேட படைமுகாம் பற்றிய பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலிருந்து சுமார் 200 மைல் தொலைவில் இந்த றேன் எனப்படும் விசேட படைமுகாம் அமைந்துள்ளது. இது நோர்வேயிலுள்ள பிரதான படைமுகாம்களில் ஒன்றாக உள்ளதுடன் விசேட பயிற்சி முகாமாகவும் உள்ளது. இந்த றேன் முகாமுக்கே கடந்த 2003 ஆம் ஆண்டில் 21 புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் பயிற்சிக்காக சென்றிருந்தனர். இது பற்றி 2004 ஆம் ஓகஸ்ட் 26 ஆம் திகதி கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டது. குறித்த அறிக்கையில் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் றேன் முகாமுக்கு சென்றது. நோர்வே மற்றும் நாடுகளில் நடைமுறையிலிருக்கும் பலவகையான அரசியல் அமைப்புகள், பாராளுமன்றங்கள், இராணுவ நிர்வாக முறைகள், ஜனநாயக நடைமுறைகள், அரசியல் கட்சிகள், உள்ளூராட்சி முறைகள் என்பன பற்றிய அறிவைப் பெறுவதற்கான பயிற்சி நெறிகளுக்காகவே என்று நோர்வே தூதரகம் தெரிவித்திருந்தது. அத்துடன் சர்வதேச சமாதானப் படைகளின் செயற்பாடு, நோர்வே இராணுவத்தின் சமாதான நடைமுறைகள் உட்பட பல்வேறு இராணுவச் செயற்பாடுகள் பற்றியும் புலிகள் இயக்கத்தினருக்கு விளக்கத்தையும் பயிற்சியையும் வழங்குவதற்காகவே புலிகள் இயக்க உறுப்பினர்கள் மேற்படி றேன் விசேட படைமுகாமுக்குச் சென்றதாகவும் நோர்வே தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த றேன் முகாம் ஒரு சாதாரணமான இராணுவ முகாம் அல்ல. அமெரிக்காவின் டெல்றா போஸ் (Delta Force) படையணிச் செயற்பாடுகளுடனும் அவ்வாறே பிரிட்டிஷ் எஸ்.ஏ.எஸ். படையணியுடனும் சம்பந்தப்பட்ட விசேட இராணுவப் பயிற்சிகளை வழங்கும் விடயத்தில் நெருங்கிய தொடர்புகளை றேன் முகாம் உடையது. இந்த வகையில் அது மேற்படி டெல்ரா போஸ், எஸ்.ஏ.எஸ். படையணி முகாம்களுக்கு ஈடான ஒரு விசேட இராணுவ முகாம் ஆகும். கொசோவோ விடுதலை முன்னணி எனப்படும் பிரிவினைவாத இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு யுத்த ஆயுதப் பயிற்சிகள் மேற்படி அமெரிக்க டெல்ரா போஸ் படையணியினாலும் பிரிட்டிஷ் எஸ்.ஏ. எஸ். படையணியினாலுமே வழங்கப்பட்டன. அவ்வாறே கொசோவோ பிறதேசங்களுக்கு நோர்வேயின் றேன் முகாமிலிருந்தே இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
சேர்பியாவிலிருந்து கொசோவோவைப் பிரிப்பதற்காகவும் கொசோவோ விடுதலை முன்னணியின் பிரிவினைப் போருக்கு உதவுவதற்குமாகவே மேற்படி நோர்வே றேன் விசேட முகாமிலிருந்து படையினர் அனுப்பப்பட்டனர். இதற்கென றேன் முகாமில் படையினர் தெரிவு செய்யப்பட்டு கேபோர் படையணி (Norwegian Kfor Force) என்ற பெயரில் விசேட படையணி கொசோவோவுக்கு அனுப்பப்பட்டது.
இந்த றேன் முகாம் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் மிக இரகசியமான முறையில் இயங்கி வருகிறது. றேன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த முகாம் எப்.எஸ்.கே. முகாம் (FSK) என்றே இராணுவரீதியில் குறிப்பிடப்படுகிறது. இதற்குக் காரணம் றேன் முகாமில் எப்.எஸ்.கே. எனப்படும் அதி விசேட யுத்தப் பயிற்சி பெற்ற படையணி அங்கு இருப்பதே ஆகும். இப்படையணி தூர தாக்குதல் படையணி என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு றேன் முகாம் பற்றியோ எப்.எஸ். கே. படையணி பற்றியோ நோர்வே மக்களுக்கோ நீண்டகாலமாகத் தெரிந்திருக்கவில்லை. கொசோவோ பிரிவினை யுத்தம் தீவிரமடைந்த 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே நோர்வே மக்கள் இந்த முகாம்பற்றியும் படையணிகள் பற்றியும் அறிந்துகொண்டனர்.
இவ்வாறு சேர்பியாவில் பிரிவினைவாதிகளான கொசோவோ விடுதலை முன்னணிக்கு ஆதரவாகச் செயற்பட்ட நோர்வே அரசு தான் சமகாலத்தில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை பயிற்சிகளுக்காக முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இவ்வாறு முன்னர் கொசோவோ விடுதலை முன்னணியின் உறுப்பினர்களை றேன் முகாமுக்கு வரவழைத்து யுத்தப்பயிற்சி வழங்கிய நோர்வே அரசு பின்னர் புலிகள் இயக்கப் பிரிவினைவாதிகளை அங்கு அழைத்துப் பயிற்சி வழங்கியது.
றேன் முகாமில் யுத்தநிறுத்தக் கண்காணிப்பு சம்பந்தப்பட்ட இராணுவப் பயிற்சிப் பிரிவின் தலைவர் புறுஹோவிதே கூறுகையில்;
இவ்வாறு குறித்த முகாமுக்கு அழைக்கப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி நெறிகளில் சமாதானம் சம்பந்தப்பட்ட இராணுவப் பயிற்சிகள் மட்டுமன்றி பலவகையான இராணுவ நடவடிக்கைகள் பற்றிய விளக்கமும் பயிற்சிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதிலிருந்து நோர்வே அரசு புலிகளை இயக்கப் பயங்கரவாதிகளின் ஈழம் தனிநாட்டு இலட்சியத்திற்காக எவ்வாறு இரகசியமாகவும் தீவிரமாகவும் செயற்பட்டது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
திவயின: 09/03/2008