லாகூரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தனது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துவிட்டது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 29 ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாட வேண்டும். ஆனால், பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டதிலிருந்து, அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. பாதுகாப்பு அச்சம் காரணமாக, அவுஸ்திரேலிய அணி அங்கு செல்ல தயக்கம் காட்டியது.
அங்கு ஆய்வு செய்த அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும், தற்போதைய சூழலில் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து பாகிஸ்தான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த வாரத்திற்குள் பாகிஸ்தான் பயணம் தொடர்பாக இறுதி முடிவை அறிவிப்போமென்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கூறியிருந்தது.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக இரண்டு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து நேற்று முன்தினம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று முன்தினம் காலை அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியானது.
உரிய நேரத்தில் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் சூழலால், இத்தகைய முடிவை தவிர்க்க இயலாமல் போனதாகவும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் கிரேக் ஓ கானர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவின் இந்த முடிவு தங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத்தலைவர் நசிம் அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார்.