* பாகிஸ்தான் பயிற்சியாளர் வருத்தம்
பாகிஸ்தான் பயணத்தை அவுஸ்திரேலிய அணி ஒத்திவைத்ததால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெப்லோசன் இதனால், அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில்;
"நான் பாகிஸ்தானில் தான் வசிக்கிறேன். பாதுகாப்புடன் இருப்பதாகவே உணர்கிறேன். அவுஸ்திரேலியாவின் கவலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம், இந்த முடிவை நியாயமற்றதாகவே கருதுகிறேன்.
உலகின் தலைசிறந்த அணி தோற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுடன் விளையாட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனால், இது ஒரு வகையில் மகிழ்ச்சியே. சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, இரத்தாகவில்லை. இரத்துச் செய்யப்பட்டிருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருக்கும்" என்றார்.
பாகிஸ்தானில் இந்தத் தொடரை நடத்தவுள்ள திகதி மற்றும் இடம் குறித்து அடுத்த வாரம் டுபாயில் இரண்டு நாட்டு கிரிக்கெட் சபை நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தவுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு இறுதிவரை இந்தத் தொடரை நடத்துவதற்கு வாய்ப்பில்லை. அவுஸ்திரேலிய அணி பிசியான போட்டி அட்டவணையை கொண்டுள்ளது. எனவே, புதிய அட்டவணையை தயாரிப்பது கடினமான காரியம்.
2009 அல்லது 2010 ஆம் ஆண்டில் இந்தத் தொடர் நடத்தப்படலாம் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லாண்ட் கூறினார். வீரர்களின் நெருக்கடியால் ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டது என்பதை அவர் மறுத்தார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
பிரிமியர் லீக்கில் ஆடுகிறார்கள்
திட்டமிட்டபடி பாகிஸ்தான் பயணம் தொடர்ந்திருந்தால் அவுஸ்திரேலிய வீரர்கள் இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டியில் விளையாட முடியாமல் போயிருக்கக் கூடும். ஆனால், இப்போது பாகிஸ்தான் தொடர் தள்ளிப் போய்விட்டதால், அவர்கள் ஐ.பி.எல். போட்டியில் சில போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்கள்.
இது பற்றி ஜேம்ஸ் சுதர்லாண்ட் கூறுகையில்; "ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்குகிறது. அவுஸ்திரேலிய அணி மே மாதம் தொடக்கத்தில் மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருக்கிறது. அனேகமாக அவுஸ்திரேலிய வீரர்கள் பிரிமியர் லீக் போட்டியில் சிறிது காலம் விளையாட வாய்ப்பிருக்கிறது" என்றார்.