மேற்கிந்தியாவுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியிலிருந்து சனத்ஜெயசூரிய நீக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம், இத்தொடரில் முத்தையா முரளிதரனும் சேர்க்கப்படவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அணித்தேர்வுக் குழுவின் கூட்டத்திலேயே பலத்த வாதப்பிரதிவாதங்களையடுத்து, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சனத்ஜெயசூரியவை அணியிலிருந்து நீக்குவதெனவும் முரளிதரனுக்கு ஓய்வளிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டியிலும் அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோணத் தொடரிலும் சனத்ஜெயசூரிய சோபிக்கத் தவறியதையடுத்தே அணியிலிருந்து அவரை நீக்குவதென தேர்வுக் குழு முடிவு செய்தது.
அதேநேரம், ஒருநாள் போட்டிகளில் முரளிதரனும் பந்து வீச்சில் சோபிக்கத் தவறிவருவதாக அணி நிர்வாகம் கருதுகிறது. முக்கோணத் தொடரில் 8 போட்டிகளில் இவர் 10 க்கும் குறைவான விக்கெட்டுகளையே வீழ்த்தியிருந்தார்.
இதனால் இந்தத் தொடரில் இவருக்கு ஓய்வுகொடுக்க தேர்வுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இத் தொடருக்கான அணியில் சிலாபம் மரியன்ஸ் அணியைச் சேர்ந்த மஹேல உடவத்த, இராணுவத்தைச் சேர்ந்த அஜந்த மென்டிஸ் மற்றும் ராகம சி.சி.யைச் சேர்ந்த கௌசல்ய வீரரட்ன ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அஜித் மென்டிஸ் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர். உள்ளூர் போட்டிகளில் இராணுவ அணிக்காக இவர் சிறப்பாக பந்து வீசியுள்ளார்.
கௌசல்ய வீரரட்ன 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான தொடரில் இலங்கை அணியில் பங்கேற்ற பின் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சனத் ஜெயசூரியவின் இடத்திற்கு மஹேல உடவத்த சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.