டாக்டர் எமன் என வர்ணிக்கப்பட்ட ஜெயந்த் பட்டேல் அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்திலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யபபட்டுள்ளார்.
தனது கடமைகளில் கவனயீனமாக இவர் இருந்ததால் இவரது நோயாளர்கள் பலர் இறந்தும் பலர் தீராத நோய்கள், தேவையற்ற சத்திரச் சிகிச்சைகள் போன்றவற்றுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸாரால் இவர் கைது செய்ப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் 17 நோயாளிகளின் இறப்புக்கும் வேறு சிலரின் உடல் உபாதைகளுக்கும் அவரே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்று வழக்கைத் தொடர அவுஸ்திரேலிய அரசு விரும்புகிறது.
குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரைச் சேர்ந்த ஜெயந்த் பட்டேலுக்கு இப்போது வயது 57. பணியில் கவனக்குறைவாக இருந்தார். தேவையில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்தார். மருந்துகளைப் பரிந்துரைத்ததிலும் பிற விடயங்களிலும் அக்கறையின்றி அவர் செயற்பட்டதால் பல நோயாளிகள் நீண்ட காலமாகவே உடல் உபாதைகளுக்கு உள்ளானார்கள் என்று அவர் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவரிடம் சிகிச்சை பெற்று அவரால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் நோயாளிகள் அல்லது அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் சேர்ந்து ஒரு சங்கமே வைத்திருக்கின்றனர்.
அவுஸ்திரேலியா, குவின்ஸ்லாந்து மாநிலத்தில் புண்டாபெர்க் மருத்துவமனையில் பணிபுரிந்த ஜெயந்த் படேல் 2005 ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினார். அதற்கு முன்னதாக அவர் மீதான புகார்களை அவுஸ்திரேலிய அரசு விசாரித்தது.
அவருடைய கவனக்குறைவால் நோயாளிகள் இறந்திருப்பதும் உடல் உபாதைக்கு உள்ளானதும் நிரூபிக்கப்பட்டது. அதையடுத்தே அவர் மீது குற்றச்சாட்டுகள் தொகுக்கப்பட்டன.
நோயாளிகளைக் கொன்றதாக 3 தனித்தனி குற்றச்சாட்டுகள், நோயாளிகளுக்குக் கடுமையான உடல் உபாதையை ஏற்படுத்தியதாக 3 தனித்தனி குற்றச்சாட்டுகள் கவனக்குறைவாகச் செயற்பட்டதாக 2 தனித்தனி குற்றச்சாட்டுகள், ஏமாற்றியதாக 5 குற்றச்சாட்டுகள், 4 இலட்சம் ரூபாக்கு மேல் ஏமாற்றிப் பணம் பறித்து விட்டதாக 2 தனித்தனி புகார்கள், ஏமாற்ற முயன்றதாக மேலும் ஒரு குற்றச்சாட்டு என்று அவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இறப்புக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும். பிற குற்றச்சாட்டுகளுக்குக் குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் என்பதில் தொடங்கி 14 ஆண்டுகள் சிறைவாசம் வரை விதிக்கப்படலாம்.
டாக்டர் ஜெயந்த் பட்டேல் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் அவரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜெயந்த் பட்டேல் மீது குவீன்ஸ்லாந்து மாநில பத்திரிகைகள் வெகு விநோதமாகவே எழுதி வந்திருக்கின்றன. மக்களும் அவரைக் கொடூரமான டாக்டராகவே கருதுகின்றனர். எனவே, அங்கு விசாரணை நடந்தால் அவருக்குப் பாதகமாகவே தீர்ப்பு இருக்கும் என்று பட்டேலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் அஞ்சுகின்றன.