பிரான்ஸின் தலைநகர் பாரிஸை மையமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் இணையச் செய்திச் சேவைகளை தணிக்கை செய்யும் அரசுகளுக்கெதிரான கணினி மூலமான ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இணையத்தளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக அவ் இணையத்தளங்களை முற்றாகத் தடை செய்வதில் சில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் குறிப்பாக ஆசிய நாடுகள் பலவற்றைக் கண்டித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணையத் தளங்களை பயன்படுத்துவோர் இந்த கண்டன நடவடிக்கையில் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தியனன்மென் சதுக்கம் வடகொரியாவின் கிம் இல் சுங் சதுக்கம் கியூபா மற்றும் பர்மாவின் தெருவீதிகள் உட்பட 9 நாடுகளின் தலைநகரங்களின் பகிரங்க திறந்தவெளிகள், இணைய வலையத்தில் விசேடமாக உருவாக்கப்பட்டுள்ளன.
2600 க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் கடந்த வருடம் இந்த அரசாங்கங்களினால் மூடப்பட்டன என்றும் கணினி மூலமான கண்டனக்காரர்கள் 62 பேர் பல நாடுகளிலுமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் பிரான்ஸின் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.