பீஜிங் ஒலிம்பிக்குக்கு இந்திய ஹொக்கி அணி தகுதி பெறாதது மட்டும் மோசமான நிகழ்வு கிடையாது. இந்திய ஹொக்கிச் சம்மேளனம் விழித்துக் கொள்ளாவிட்டால் டெல்லியில் 2010 ஆம் ஆண்டு ஆண்கள் உலகக் கிண்ண ஹொக்கிப் போட்டியை நடத்தும் வாய்ப்பும் பறிபோய் விடலாம்.
ஹொக்கியில் இழந்த பெருமையை மீட்கும் வகையில் இந்தியாவில் ஹொக்கி போட்டியை வளர்ச்சிப்படுத்தும் திட்டத்தை சர்வதேச ஹொக்கி சம்மேளனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தினால் தான் 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி நடத்த அனுமதிக்கப்படும் என்று ஏற்கனவே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஹொக்கி வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது என்பதை அறியக் காத்திருப்பதாக உலக நிர்வாகக் குழுத் தலைவர் ரிஸ்மான் தெரிவித்திருக்கிறார்.
தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணியின் மோசமான செயற்பாட்டால் சர்வதேச சம்மேளனம் மிகவும் அதிருப்தியில் உள்ளது. இதனால், 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியை இந்தியாவில் நடத்துவதில் திடீரென சிக்கல் உருவாகியுள்ளது.
இந்திய ஹொக்கி வளர்ச்சித் திட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை டெல்லியில் நடத்துவது தொடர்பாக சர்வதேச ஹொக்கி சம்மேளனம் 25 ஆம் திகதி சுவிற்சர்லாந்தில் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.