அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்த இந்திய அணிக்கு உண்மையான சவால் இனித்தான் தொடங்குகிறது என்று லாரா கூறியுள்ளார்.
மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் பிரைன் லாரா டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது;
இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்குத் தனித்தனியாக புதிய கப்டன்கள் நியமிக்கப்பட்டனர். இருந்த போதிலும் இந்திய அணி அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால், தோல்வி கண்ட அவுஸ்திரேலியா வலுவான அணியாக வீறு கொண்டு எழுந்து இந்தியாவைப் பழிவாங்கத் துடிக்கும். எனவே, இந்தியாவுக்கு இனிமேல் தான் உண்மையான சவால் தொடங்குகிறது.
கும்பிளேயும், தோனியும் சிறப்பாகச் செயற்பட்டனர். ஆனால், அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முக்கோண ஒரு நாள் போட்டியில் பெற்ற வெற்றியால் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. தொடர்ந்து இந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு இறுதிப் போட்டியிலும் சச்சின் டெண்டுல்கர் (117, 91 ஓட்டம்) அபாரமாக ஆடினார். அவர் தலைசிறந்த வீரர் என்று பல முறை சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவுஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜோன் புச்சனன் , இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டெண்டுல்கரை சீண்டி விட்டது (அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் ஷோட்பிச் பந்துக்கு டெண்டுல்கர் திணறுவார் என்று சொல்லியிருந்தார்) தவறானதாகும். இது டெண்டுல்கரை மேலும் சிறப்பாக செயற்படத் தூண்டியிருக்கும்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடினேன். ஆனால், 20 ஓவர் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட போட்டியாகும். இந்த வகை போட்டியில் ஆடுவதிலும் மகிழ்ச்சியளிக்கிறது. 20 ஓவர் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்காலமுள்ளது.
கபில்தேவ் தலைமையில் செயற்படும் இந்திய கிரிக்கெட் லீக்கில் (ஐ.சி.எல்) ஒப்பந்தம் ஆன லாரா கடந்த ஆண்டு நடந்த ஐ.சி.எல் 20 ஓவர் போட்டியில் ஜொலிக்கவில்லை. 4 போட்டிகளில் மொத்தம் 24 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் வெறும் 16 ஓட்டங்களைத் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.